இயக்குநர்கள் நடிகர்களாவது தமிழ்ச் சினிமாவுக்கு புதிதல்ல. அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாய் இடம் பிடிக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘லீ’, ‘கொக்கி’, ‘லாடம்’, ‘மைனா’, ‘சாட்டை’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன். தற்போது இவருடைய இயக்கத்தில் ‘கும்கி-2’, மற்றும் ‘காடன்’ ஆகிய படங்கள் உருவாகி வெளியாக காத்திருக்கின்றன.

இந்த நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் தற்போது நடிகராக உருமாறியிருக்கிறார். இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கவிருக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தில்தான் பிரபு சாலமன் நடிக்கவிருக்கிறார்.
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இயக்குநர் விஜயகுமார் பிரபு சாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.