திரைப்பட வெளியீடுகள் என்பது சங்கிலித் தொடர் போலத்தான். ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் அடுத்து வரிசையில் நிற்கும் படங்களின் வெளியீட்டையும் நிச்சயம் பாதிக்கும்தான்..
‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் அதிரிபுதிரி வெற்றியாக தமிழகமெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. முதல் வாரமே 20 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டு தியேட்டர் வசூலிலேயே பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் அந்தப் படம் நிச்சயமாக 70 சதவிகித பார்வையாளர்களுடன் மேலும் வசூலைக் குவிக்கும் என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நம்புகிறார்கள்.
அதனால் அடுத்தடுத்து வாரங்களில் அதே தியேட்டர்களில் வெளியிட காத்திருந்த படங்களுக்கு இப்போது தியேட்டர்கள் கிடைக்காத நிலைமை.. போதாக்குறைக்கு ‘வேலையில்லா பட்டதாரி’யின் வெற்றிக்காக ‘ஜிகர்தண்டா’ படத்தை ஒரு வாரம் ஒத்தி வைத்து அதை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு மாற்றிவிட்டார்கள்.
இதனால் அதே தேதியில் வெளியாகவிருக்கும் இயக்குநர் பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்திற்கு பாதிப்பு வரலாம் என்பதை இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்..
மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அண்ணன் பார்த்திபன் தனது ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் வெளியீட்டை இப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளாராம்.
இது குறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தி இது :
நல்ல முடிவு.. வேறு வழியில்லை.. பெரிய படங்களுடன் போட்டியிட்டு பார்வையாளர்கள் வராத சூழலில் தோல்வி என்று நினைத்து திரும்புவதைவிட.. இன்னும் கொஞ்சம் காத்திருந்து வெளியிட்டு அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்லி திரும்புவதுதான் நல்லது..!