full screen background image

“கதைதான் முக்கியம்; ஹீரோ அல்ல…” – இயக்குநர் பி.வாசுவின் பேச்சு..!

“கதைதான் முக்கியம்; ஹீரோ அல்ல…” – இயக்குநர் பி.வாசுவின் பேச்சு..!

இன்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘தற்காப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ஹீரோவான சக்திவேல் வாசுவின் தந்தையும், பிரபல இயக்குநருமான பி.வாசு பேசும்போது, “மக்கள் கதாநாயகர்களைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். கதை நன்றாக இருந்தால்தான் படம் தப்பிக்க முடியும்..” என்றார்.

tharkkaapu-audio-launch-stills-008

அவர் மேலும் பேசும்போது,  “கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறேன். இன்று எனக்கு பிறந்த நாளும்கூட. என் படக் குழுவினர் தொழில் நுட்பக் குழுவினரை விட்டுவிட்டு நான் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான்.

இங்கே  என் மகனுக்காக வந்துள்ளேன். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு, புகுந்த விடு என்று இரு  வாழ்க்கை இருக்கும் என்பார்கள். ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்று நமது வாழ்க்கை.  இன்னொன்று பிள்ளைகளால் வரும் வாழ்க்கை.

மகன் ஆளாகும்வரை அப்பாக்கள் படும் கஷ்டம் எல்லாருக்கும் புரியாது. எங்கப்பா என்னை ஆளாக்கப் பட்டபாடு, இப்போதுதான் ஒரு தகப்பனாக எனக்குப் புரிகிறது.

எல்லா இயக்குநர்களும் என்னிடம் கதை சொல்ல வேண்டுமே என்று சக்தியிடம் கதை சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் நான் சக்திக்காக கதை கேட்பதில்லை. சக்தி கேட்கச் சொன்னால் மட்டும்தான் கேட்பேன்.

நான் வரிவிலக்குக் குழு, தணிக்கைக் குழுவிலெல்லாம் உறுப்பினராக இருக்கிறேன். பார்க்கிற படங்களில் சிலர் நல்ல கதையை சரியாகச் சொல்லாதபோது சில காட்சிகளில் கோட்டைவிட்டதை எல்லாம் பார்த்தால் வருத்தப்படுவேன்.

இதுவரையிலும் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கிவிட்டேன். நடிப்பது சிரமம் என்பது எனக்குத் தெரியும்.  என்னை விஜயகாந்தும், மகராஜனும்தான் நடிக்கக் கூப்பிட்டார்கள். நான் எவ்வளவோ பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பில் நடிக்க பதற்றமாக இருந்தது எனக்குள் யாரோ புகுந்து விட்டமாதிரி பதட்டமாக இருந்தது. அப்போது  எல்லா கண்களும் சுற்றிலும் பார்க்க அமைதியான சூழலில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

சக்தியைப் பொறுத்தவரை அவனை நான் பாராட்டவில்லை என்று தன் அம்மாவிடம் சொல்வானாம், அப்பா பாராட்டவில்லையே என்று குறைபடுவானாம். இந்தப் படம் ‘தற்காப்பு’ திருப்தியாக வந்திருக்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது.

சக்திக்கு இனிமேல் நல்ல நேரம்தான். மற்றவர்களும் அவனைப் பாராட்டுவார்கள். நான் என்றும் சொல்வேன் மக்கள் கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அதற்குத்தான் இயக்குநர் தேவை. இப்படம் நல்ல கதையுடன் வந்திருக்கிறது. படம் வெற்றி பெற பெரிதும் வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score