இயக்குநர் நவீன் தயாரித்து இயக்கிய ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தினை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனான விசாகனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் செய்தியை இயக்குநர் நவீன் அளித்த அறிக்கையுடன் வெளியிட்டிருந்தோம்..
இப்போது அதற்குப் பதிலாக விசாகனின் தாய் மாமனான தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சொர்ணா சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“எனது Flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன். அப்போது ‘மூடர் கூடம்’ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார்.
படம் இயக்கித் தருவதாகச் சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக் கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம் போட்டு அதன்படி நடந்து கொள்வதாக கூறினார்.
ஆனால் ஒப்பந்தத்தின்படி எந்த வகையிலும் நடக்காமல் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மாதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு அலுவலகம் மூலமாகவே செய்யப்பட்டது.
நான் இதன் பிறகு 27.04.2017 ல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக ஒரு புகார் கொடுத்தேன். அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒரு நாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.
ஏற்கனவே பல புகார்கள் அவர் மேல் இருப்பதாக அறிகிறேன். நவீன் ‘மூடர் கூடம்’ என்னும் ஒரு படத்தை மட்டும்தான் இயக்கியுள்ளார். மற்றபடி ஏற்கனவே ‘கொளஞ்சி’ என்ற படம் எடுத்து 2 வருடங்களாகியும், அதுவும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன்.
என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன் பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.
நான் சட்டப்பூர்வமாகத்தான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார்.
நான் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்ட்டில் இதைச் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட திட்டமிடுகிறார் இயக்குநர் நவீன்…” என்று அந்த அறிக்கையில் சொர்ணா சேதுராமன் கூறியிருக்கிறார்.