இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்போது பாடகராகவும் மாறியிருக்கிறார்.
இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘புது ஒரு கதவு திறக்குது’ என்ற பாடலை பாடியுள்ளார்.
ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இந்த உப்புக்கருவாடு படத்தில் கருணாகரன், நந்திதா நடிக்கின்றனர்.
“இந்தப் பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு அந்த துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார்.
படத்தில் ஒரு Solo சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். கெளதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார்.
கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் பாடுவதற்கு ஒத்துக் கொண்டு எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் ‘புது ஒரு கதவு திறக்குது‘ என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிக் கொடுத்தார் கௌதம் மேனன்.
இப்பாடல் கடற்கரை காற்று போல் ரசிகர்களுக்கு புத்துணர்வை தரும். கேட்டதை நிறைவேற்றுவதற்கு நல்ல நண்பனை தவிர எவரும் உண்டோ..?” என்றார் படத்தின் இயக்குநர் ராதா மோகன்.