மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றிய பல வதந்திகள் கடந்த காலங்களில் பரவி வந்தன.
எஸ்.பி.பி. கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த மொத்தப் பணத்தையும் சரண் அழித்துவிட்டார். சரணால்தான் எஸ்.பி.பி. தன்னுடைய கோதண்டபாணி ஸ்டூடியோவையே விற்றுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன.
எஸ்.பி.பியின் கடைசிக் காலக் கடன் தொலைக்களுக்கு முழு காரணம் எஸ்.பி.பி.சரண் தயாரித்த படங்கள்தான். அவர்தான் படமெடுக்கத் தெரியாமல் எடுத்து பணத்தை நஷ்டமாக்கிவிட்டார் என்றெல்லாம் சரண் மீது குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
இது குறித்து இத்தனை நாட்கள் கழித்து எஸ்.பி.பி.சரண் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “சினிமா மீது எனக்கிருந்த பாசத்தின் காரணமாகத்தான் நான் சினிமா தயாரிக்க முடிவு செய்து அதில் இறங்கினேன்.
நான் முதலில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தைத் தயாரித்தேன். அதற்கு மாநில அரசின் விருதும் கிடைத்தது. ஆனால், படத்தின் மூலம் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.
அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘வர்ஷம்’ என்ற படத்தை தமிழில் ‘மழை’ என்ற பெயரில் ரீமேக் செய்தேன். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இல்லையென்று சொல்லவில்லை. அப்போது “இந்த சினிமா தொழிலில் நஷ்டமெல்லாம் சகஜமானது…” என்று அப்பா எனக்கு ஆறுதல் சொன்னார்.
அதன் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் ‘சென்னை-28’ படத்தை எடுத்தேன். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், படத்தின் விற்பனை விவகாரத்தினால் எனக்கு எதிர்பார்த்த பணம் வரவில்லை.
இதையடுத்துதான் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம் தேசிய விருதுகளை எனக்குப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுவும் வசூல் ரீதியாக எனக்குத் தோல்வியைத்தான் தந்தது.
“நாம் நல்ல படங்கள்தானே எடுத்தோம்.. அப்புறமும் ஏன் நமக்கு மட்டும் நஷ்டம் ஏற்படுகிறது…?” என்று எனக்கு மன உளைச்சல் அதிகமானது.
அந்த நேரம் எங்களின் கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் பல்வேறு காரணங்களினால் பணிகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதுவும் நஷ்டத்தில்தான் இயங்கி வந்தது. அதனால்தான் வேறு வழியில்லாமல் அந்த ஸ்டூடியோவை விற்க வேண்டியதாயிற்று.
இதை பார்த்தவர்களெல்லாம் “பாருங்கப்பா.. எஸ்.பி.பி. இத்தனை வருஷமா சம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் அவர் பையன் வந்து அழித்து அவரை திவாலாக்கிட்டான். அவருடைய மொத்த சொத்தும் அவருடைய பையனால் கரைந்துவிட்டது. இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவுதான்…” என்று எங்களது காது படவே பேசினார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் அப்பா, அம்மா இருவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். மேடை கச்சேரிகள்தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின. அதே நேரத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப் பெரிய சோதனைகள் நடந்தது. டைவர்ஸ் என்று முடிவாகி என் மனைவி, குழந்தையைவிட்டுப் பிரிந்தேன். என் குழந்தையை நான் பார்த்தே இப்போது 10 வருடமாகிவிட்டது.
கடைசியாக இப்போது கொரோனாவால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது. தற்போது தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க என்னை அழைத்து உள்ளனர். நானும் ஒத்துக் கொண்டுள்ளேன். இனிமேல் எனது தந்தையின் குரலில் கச்சேரிகளில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்.
ஆனாலும் தயாரிப்புத் தொழிலையும் கைவிடுவதாகவும் இல்லை. நான் விட்டாலும் அது என்னைக் கைவிடாது போலிருக்கிறது. தற்போது முன்னணி ஓடிடி தளத்திற்காக ஒரு வெப் சீரிஸை தயாரித்து, இயக்கி வருகிறேன். விரைவில் படத் தயாரிப்பிலும் இறங்குவேன்..” என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.சரண்.