‘மூன்றாம் பிறை’, ‘கிழக்கு வாசல்’, ‘இதயம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘எம் மகன்’ என்று அனைவராலும் பாராட்டப்பட்டு மத்திய, மாநில விருதுகளை வாங்கிக் குவித்த படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்தத் தயாரிப்பை அறிவித்திருக்கிறது.
‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ போன்ற படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் பிரபு சாலமன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார். தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் இந்தியா முழுவதிலும் பெரும்பான்மையான ரசிகர்களையும் ஈர்த்து தேசிய விருது பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.
வெற்றிக் கூட்டணியான பிரபு சாலமன் – டி.இமான் கூட்டணியே இதிலும் தொடர்கிறது. ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு –ராகுல்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி.ஜி.தியாகராஜனின் புதல்வர்கள். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.
“இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சங்கமான படமாக இது இருக்கும்…” என்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
இன்னமும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.









