சினிமாவில் இன்றோடு தனது 20 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளார் நடிகர் தனுஷ். அவர் முதன்முதலில் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய நாளில்தான் வெளியானது.
இதையொட்டி தனது ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
அந்த அறிக்கையில், “நான் சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நேரம் சீக்கிரமே கடந்துவிட்டது. நான் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்கத் தொடங்கும்போது இந்த இடத்திற்கு வருவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. கடவுள் கருணை உள்ளவர்.
என் ரசிகர்களின் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி சொன்னால் போதாது. அவர்கள்தான் என் மிகப் பெரிய பலமே. பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தருணத்தில் நான் பணியாற்றிய, தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
என்னுடைய குரு என் அண்ணன் செல்வராகவனுக்கும் நன்றி. ஏன் என்று உங்களுக்கே தெரியும்..!
எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை கண்டு பிடித்த எனது அப்பா கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நன்றி. இறுதியாக எனது அம்மா, தினமும் அவர் செய்யும் பிரார்த்தனைதான் என்னைப் பாதுகாத்து இந்த இடத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அம்மா இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எண்ணம் போல் வாழ்க்கை. அன்பைப் பகிருங்கள். ஓம் நமச்சிவாய” என்று தெரிவித்துள்ளார்.










