பி.டி.ஜி.யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டிமான்டி காலனி-2’.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமான, மெகா ப்ளாக் பஸ்டர் ‘டிமாண்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.
இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் அண்ணா நகர் வி.ஆர். மாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசும்போது, “பி.டி.ஜி.யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் குளோபல் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறோம். பின்பு ஏன் படத் தயாரிப்பில் இறங்க வேண்டும் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும்.
எங்களது நிறுவனம் பெருவாரியான மக்களிடம் சென்று சேர வேண்டும். ஹாலிவுட்டில் இருப்பது போல் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டூடியோ நிறுவனமாக நாங்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் படத் தயாரிப்பில் தற்போது இறங்கியுள்ளோம்.
பத்து படங்களை மொத்தமாக, பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஐடியா எதுவும் எங்களிடையே இல்லை. மக்கள் எதை ரசிக்கிறார்கள்.. எது அவர்களுக்குப் பிடிக்கிறது.. என்பதை ஆராய்ச்சி செய்தோம்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழ் மக்களுக்கு ஹாரர் படங்கள் அதிகம் பிடித்திருப்பதை அறிந்தோம். டிமான்டி காலனி படக் குழுவான அருள்நிதி – அஜய் ஞானமுத்து டீம் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அவர்களுடன் எங்களது முதல் படத்திற்கா இணைந்துள்ளோம்.
அவர்கள் சராசரி படமாக இதைச் செய்யவில்லை. படத்தில் வரும் கதை அழுத்தமானது. அதே டெக்னிகலாக இதுவரை பார்த்திராத உலகம் சவுண்டிங், சிஜி எல்லாமே உலகத் தரமாக இதில் உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு புதிய உலகத்தை நீங்கள் ரசிப்பீர்கள்.
ஒரு சின்ன அறிமுகம்தான் இந்தப் படத்தின் டிரெய்லர். இன்னும் நிறைய ஆச்சரியங்கள் படத்தில் இருக்கிறது. படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும்.
நாங்கள் வெவ்வேறு ஜானரில் நான்கு படங்கள் செய்து வருகிறோம். ஆனால், எங்களின் முதல் அடையாளமாக இந்த ‘டிமான்டி காலனி-2’ திரைப்படம் இருக்கும்..” என்றார்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் டாக்டர் மனோஜ் பெனோ பேசும்போது, “நான் ஒரு டாக்டர். சினிமா எதற்காக என்றால், இந்த இன்ட்ஸ்ட்ரி மக்களுக்கான தேவைகளை சப்ளை செய்யும் ஒரு துறையாக இருக்கிறது. மக்கள் அனைவருக்கும் எண்டர்டெயின்மெண்ட் தேவையாய் இருக்கிறது. அது இருக்கும்வரை நாங்கள் உழைத்துக் கொண்டே இருப்போம். மக்கள் எங்களை வாழ வைப்பார்கள். அதனால்தான் பாபி சினிமாவுக்குள் வருவதாகச் சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். ஆனால், இங்கே உள்ளே நுழைந்த பிறகு முன்னமே வந்திருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு பெரிய மாற்றத்தை திரைத் துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார் பாபி.
இந்த ‘டிமான்டி காலனி-2’ படத்தின் டிரைலரில் நீங்கள் பார்த்தது ஒரு பருக்கைதான். இன்னும் உங்களை மிரட்டுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்குக் காரணமானவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துதான். அவர் பேய்க்கு பயந்தவர். ஆனால் பாருங்கள் நம்மை எப்படியெல்லாம் மிரட்டுகிறார். இப்படம் உங்களை ஒரு நொடி கூட அக்கம்பக்கம் திரும்பவிடாது.
அருள்நிதி ஒவ்வொரு சின்ன விசயத்திலும், அக்கறை எடுத்துக் கொண்டு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார். பிரியா இந்தப் படத்தில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவருக்கு முக்கியமான படமாக இப்படம் இருக்கும். அருண் பாண்டியன் சார் எனக்கு அண்ணாதான். எங்களுக்கு எல்லா விசயத்திலும் அறிவுரை தந்து ஆதரவாக இருந்தார்.
சாம் சி.எஸ். இசையில் சின்ன சின்ன சவுண்டிங்கில் அசத்தியிருக்கிறார். இந்தப் படம் ஒரு புதிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும், படத்திற்கு ஆதரவைத் தாருங்கள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.
நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, “இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பாபி மற்றும் மனோவிற்கு என் நன்றி. இந்தக் கதையை அஜய் சொன்னபோது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரம். நான் இதற்கு ஓகேவா என்று கேட்டேன். நீங்கள்தான் வேண்டும் என்றார். அருள்நிதி ரொம்பவே ஃபிரண்ட்லியாக இருந்தார். பிரியா என் தோழி. அவருடன் பழகியது வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தந்தது. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள். எல்லோருக்கும் நன்றி..” என்றார்.
நடிகர் முத்துக்குமார் பேசும்போது, “அஜய்க்கு என் நன்றி. பொதுவாகக் கதை சொல்லும்போது என் கேரக்டர் என்ன… அது எப்படி பிகேவ் பண்ணும் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் முதலில் இப்படத்தில் நடித்தேன். ஆனால் அஜய் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எப்படி நடிக்க வேண்டும் என்று வேறு மாதிரி சொல்லித் தந்தார். அஜய்க்குள் மிகச் சிறந்த நடிகன் இருக்கிறான். அவர் சொன்னது போல்தான் எல்லோரும் நடித்தோம். ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். இப்படத்தில் காமெடி உட்பட எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. படம் புதுசாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி..” என்றார்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசும்போது, “அஜய் சாருக்கு ‘கோப்ரா’ வாய்ப்பிற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு ஒரு கைட் மாதிரி இருந்து வருகிறார். ‘டிமான்டி’ வந்தபோது எனக்கு 15 வயது, இப்போது அந்தப் படத்தின் 2-ம் பாகத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. அருள்நிதி சார், பிரியா மேடம் எல்லோருக்கும் என் நன்றிகள். படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்..” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, “இயக்குநர் அஜய்யிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத்தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்குமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம். ஆனால் கலைஞன் தோற்பதில்லை.
இந்தப் படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப் படத்தில் வேலை பார்ப்பதற்காக வேறு பல படங்களை நான் செய்யவில்லை, அதில் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்.
தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார், இப்படத்தை அவர் பிஸினசாக அணுகவில்லை. ஆத்மார்த்தமாகப் பிடித்துச் செய்திருக்கிறார். அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தரும். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்..” என்றார்.
நாயகி பிரியா பவானி சங்கர் பேசும்போது, “உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம். எனக்கு இந்தக் கதாபாத்திரத்தைத் தந்ததற்கு இயக்குநர் அஜய்க்கு பெரிய நன்றி.
அருள்நிதியுடன் இது எனக்கு இரண்டாவது படம். எனக்கு மிகப் பெரும் ஆதரவாக இருந்தார். அருண் பாண்டியன் சார் உடன் செட்டில் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டிருப்பேன். ஜாலியாக இருந்தது. மீனாட்சி மிக அழகாக நடித்துள்ளார். பாபி சார் உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியாக இந்தப்படம் அமையும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும்..” என்றார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசும்போது, “பாபி சார்தான் இந்தப் படம் பெரிதாக வரக் காரணம். ஒரு படம் இயக்கும்போது இயக்குநருக்கு அந்தப் படத்தின் செலவைக் குறைக்க மனது வராது. படத்தைத் தரமாகத் தரத்தான் நினைப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எங்களால் முடியாதபோது அதற்கு ஆதரவாகக் கிடைத்தவர்தான் சுப்பிரமணியன் சார். அவருக்கு என் நன்றி.
நாம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தாத்தா பேரில் ஆரம்பித்து அப்பாவை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டேன். என் அப்பாவுக்கு நன்றி. படம் முக்கால்வாசி முடிந்திருந்தபோது உள்ளே வந்தவர்கள்தான் பிடிஜி.
மனோஜ் சார் தான் முதலில் படத்தை பிஸினசுக்காக பார்க்க வேண்டும் என்றார். பின்னர் முழுப் படத்தையும் தங்கள் தோளில் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பி.டி.ஜி. பற்றி கேள்விப்பட்டபோது, பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எங்கள் படத்தை எடுத்துச் செல்வது மகிழ்ச்சி.
சாம் சி.எஸ். ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல.. ஒரு இயக்குநராகவும் படத்தை அணுகுகிறார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ஹரீஷ் என்னுடன் நின்றார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் அருண் பாண்டியன் சார் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். எல்லாவற்றைப் பற்றியும் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. பிரியாவுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான ரோல். அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.
நான் இயக்கிய கோப்ரா படத்திற்கு சரியான ரிவ்யூக்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார். “தூக்கிப் போடு.. அடுத்த படம் பண்ணலாம்..” என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும். இப்போதுவரையிலும் என்னுடன் உடன் நிற்கிறார். அவருக்கு என் நன்றிகள். எனக்கு உடன் இருந்த உழைத்த என் குழுவினருக்கு நன்றிகள்…” என்றார்.

















