full screen background image

உருவக் கேலியைப் பற்றிப் பேச வரும் ‘மதிமாறன்’ திரைப்படம்

உருவக் கேலியைப் பற்றிப் பேச வரும் ‘மதிமாறன்’ திரைப்படம்

ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லெனின் பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மதிமாறன்’.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே’  புகழ் இவானா இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மந்திர வீரபாண்டியன், தயாரிப்பு – லெனின் பாபு, தயாரிப்பு  நிறுவனம் –ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல், TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ், இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – பர்வேஸ்.K., படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை இயக்கம் – V.மாயபாண்டி, சண்டை இயக்கம் – சுரேஷ் குமார், ஆடை வடிவமைப்பு – கடலூர் M.ரமேஷ், ஷேர் அலி.N, (வெங்கட் செங்குட்டுவன்), ஒப்பனை – என்.சக்திவேல், பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த ‘மதிமாறன்’ திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசும்போது, “இது நிஜமா கனவா என அறிய முடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது.

அண்ணன்கள்தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுக்கு இப்படத்திற்கு இசையமைத்துக் கொடுத்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இந்தப் படம் பாருங்கள். கண்டிப்பாக உங்களை அழ வைப்பார். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை ஊடக தோழர்களுக்கு நன்றிகள்..” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா  கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத்தான் நிறைய இடங்களில் வசனம் பேசி நடித்துள்ளேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப் படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள்.

ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக் கொண்டே இருப்பார். அவ்வளவு ஆர்வம். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகுதான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள்.  உலகில் சாதனை படைத்த பலரும் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள்தான். அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார். என் மகள்தான் நன்றாக நடித்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத் திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப் படத்திற்காக அவருக்கும் வாழ்த்துக்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் சமீப காலங்களில் மிகச் சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.  அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும். கதாபாத்திரங்கள் மீதுதான் இந்தப் படம் பயணிக்கிறது.  இந்தப்படமும் சிறப்பாக இருக்கும்.

எப்போதுமே கதைக்காகத்தான் செலவு செய்ய வேண்டும். ஹீரோவுக்காக செலவு செய்யக் கூடாது. அப்போதுதான் படம் சிறப்பாக வரும். தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர்தான் இன்றைய நாயகன். இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “ஜி.எஸ். பிரதர்ஸான நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் வாழ்த்துக்கள். பாலாவின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் இயக்குநர் மந்திராவிற்கு வாழ்த்துக்கள் அவருக்கு முதல் பட வாய்ப்பை நம்பித் தந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

இந்த டைட்டில் பற்றி இயக்குநரிடம் கேட்டேன். படிக்காத பெண் கதாபாத்திரமான நாயகியின் பெயர் மதி, குள்ளமான நாயகன் பெயர் நெடுமாறன். இரண்டையும் இணைத்து மதிமாறன் என்று தலைப்பு வைத்திருப்பதாகச் சொன்னார். டைட்டிலே இவ்வளவு யோசித்து வைத்துள்ளார். கண்டிப்பாக அவரது படம் நன்றாக இருக்குமென்று நம்புகிறேன்.

உருவ கேலியை வைத்து வித்தியாசமான களத்தில்  படம் செய்துள்ளார். டிரெய்லர் அற்புதமாக உள்ளது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிகச் சிறப்பான இசையைத் தந்துள்ளார். வெங்கட், இவானா, ஆராத்தியா மூவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “ஒரு அற்புதமான கதைக் களம். நாயகனுக்காகக் கதை எழுதும் காலத்தில் கதாபாத்திரத்திற்காக நாயகனைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் மந்திராவுக்கு வாழ்த்துக்கள். பாலாவின் உதவியாளர். மிக தைரியசாலியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.

நாயகன் வெங்கட்டின் உயரம்தான் குறைவு. ஆனால் உள்ளம் உயரமானது. உயர்ந்த உள்ளம் கொண்டிருக்கிறார். உயரமாய் இருந்து என்ன பிரயோஜனம், ஒன்றுமில்லை. நம் தமிழ்நாட்டை வளப்படுத்திய அண்ணா உயரம் குன்றியவர். உலகம் போற்றிய அப்துல் கலாம் உயரம் குன்றியவர்தான். அழகென்பது உடலில் அல்ல. அவன் செய்யும் செயலில் இருக்கிறது.

படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம். வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் என் வாழ்த்துக்கள். இவர்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்துள்ளார்கள் அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் ரத்ன சிவா பேசும்போது, “மந்திரா என்னிடம் வேலை பார்த்தவர். ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் எடுத்து அது பாதியிலேயே நின்றுவிட்டது. பின் பாலாவிடம் உதவியாளராக வேலை பார்த்தான். இரண்டாவது படம் கிடைக்கும்போது,  யாராக இருந்தாலும் கர்ஷியல் படம்தான் எடுப்பார்கள். ஆனால் இப்படி ஒரு கதைக் களத்தில் படம் செய்திருக்கும் மந்திராவிற்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பை தந்து இப்படி ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மந்திரா இப்படத்தினை செய்துள்ளார். தயாரிப்பாளர் என் நண்பர். இப்படி ஒரு படத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படங்கள்தான் பலருக்கும் கதவைத் திறந்து விடும்.

இன்றைய நாயகனான இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுக்கு இதுவரை ஒரு சரியான களம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது இந்தப் படம் அதை மாற்றும். இப்போதைய சினிமா ஏதாவது ஒரு கருத்தைப் பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. உருவக் கேலியை விமர்சிக்கும் அருமையான போராளிகளின் நல்ல படைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் மந்திர பாண்டியன் பேசும்போது, “மாதா, பிதா, பாலா சார், பாபு சார்…  எல்லோருக்கும் நன்றிகள். 11 வருட உழைப்பு, கனவு, சின்ன சின்னதாகப் பல வருடங்கள் உழைத்த பிறகு, ஒரு படம் கமிட்டாகி நின்ற பிறகு, எங்கோ வேறு ஒருவருக்குக் கதை சொன்னபோது, அந்தக்கதையைக் கேட்டு எனக்காக மட்டுமே இந்தப் படத்தைச் செய்த பாபு சாருக்கு நன்றி.

எனக்காக மட்டும் கதையே முரசாகக்  கேட்காமல் இந்தப் படத்தைச் செய்த பாபு சார் எனக்குக் கடவுள்தான். இப்படத்தை வெளியிடும் பாப்பின்ஸ் நிறுவனம் வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும்.  

நான் கிராமத்திலிருந்து வந்தவன்.. என்னை என் உருவத்தை வைத்துதான் எடை போடுகிறார்கள்.  Don’t judge book by its cover. அதுதான் உண்மை. ஒருவரின் திறமை அவரது உருவத்தில் இல்லை. அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தினை எடுத்தேன்.

இந்தப் படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக, கமர்ஷியல் அம்சத்துடன் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். இந்தப் படம் உங்களை நிச்சயமாகத் திருப்திப்படுத்தும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இவானா நாச்சியார் படத்தில் மூலம் அறிமுகம், அப்போது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது கிடைத்த அறிமுகம், நான் இந்தக் கதையை சொன்னபோது அம்மாவுடன் சென்னை வந்து கேட்டார். கதை கேட்கும்போதே அவரது அம்மா அழுது விட்டார்.

இந்தப் படத்தில் வருவது போல் இவானாவுக்கு நிஜத்தில் டிவின் லியோ எனும் தம்பி அவருக்கு இருக்கிறார். இதில் அக்காவுக்கும் தம்பிக்குமான உறவுதான் கதை. அதனால் எமோஷனலாக கமிட்டாகிவிட்டார். நான்தான் கண்டிப்பாக செய்வேன் என்றார்.

சிலர், “நல்ல அறிமுகமான நடிகையைப் போடலாமே..?” என்றார்கள். “படம் வரும்போது இவானா மிகப் பெரிய நடிகையாவார்..” என்றேன். அதேபோல் எங்கள் படம் வருவதற்கு முன்பேயே இவானா ஸ்டாராகிவிட்டார். என் தங்கைதான் இவானா. அவர் ஸ்டாரானதில் எனக்கு மகிழ்ச்சி.  

வெங்கட் ஒரு வீடியோவில் டான்ஸ் ஆடியதைப் பார்த்துதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன், அயலான் படத்தில் ஏலியன் உடம்பில் அவர்தான் நடித்துள்ளார். முகம் தெரியவிட்டாலும் பரவாயில்லை என்று திறமையைக் காட்ட நினைத்தவர்தான் வெங்கட். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக மாறுவார்.

சுதர்ஷன் ஒரு ஹீரோயிக் ரோல் செய்துள்ளார் நன்றாக நடித்துள்ளார்.  பர்வேஸ் அழகான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். சதீஸ் சூர்யா, பாலா சார் படங்கள் செய்தவர் எனக்காக எடிட் செய்தார். அவருக்கு என் நன்றிகள். தொழில் நுட்ப குழுவில் எனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள். எம்.எஸ்.பாஸ்கர் சார் என் அப்பா மாதிரி. அவ்வளவுதான்.

கார்த்திக் ராஜா  சாருக்கு ஈகோ அதிகம் அவர் வேண்டாம் என்று நிறைய பேர் சொன்னார்கள் அவரிடம் பழகும்வரை நானே அப்படித்தான் இருந்தேன், அவரது சவுண்டிங் எனக்கு அவ்வளவு பிடிக்கும். படத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஹார்ட் டிஸ்க்கில் படத்தை எடுத்துக் கொண்டு போய்தான் அவரைப்பார்த்தேன். அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். “எனக்குப் படம் பிடித்தால் இசையமைக்கிறேன். இல்லாவிட்டால் வேறு நல்ல இசையமைப்பாளர் சொல்கிறேன்” என்றார். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு  “என்னுடைய கம்பேக் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் நினைத்ததைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்” என்றார். மிக மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார் அவருக்கு நன்றிகள். படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது, “எனக்கு இந்தப் படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை இருக்கிறது.  ஓதுவார் திருவண்ணாமலையில் தினமும் கடவுள் முன் பாடுபவர். என்னைப் பார்க்க வந்தவர் இங்கு வந்து கடவுள் வாழ்த்து பாடினார். அதுவே இப்படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வாழ்த்து, இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி..” என்றார்.

நடிகை இவானா பேசும்போது, “என்னோட டீமில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 3 வருடமாகச் செய்த படம் இது. இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

மந்திரா அண்ணாவை, நாச்சியார் டைமில் இருந்து தெரியும் அப்போது தொடங்கிய நட்பு, இண்டஸ்ட்ரி பத்தி எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக் கதையை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார்.

இந்தப் படம் பாடி ஷேமிங் பத்தி பேசியுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பேசும்போது, “எனக்கு என் மேல் நம்பிக்கை இருப்பதைவிட நான் ஜெயிப்பேன் என நிறையப் பேர் என்னை நம்பினார்கள். என் அப்பா, அம்மா முதல் என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி.

என்னை ஹீரோவாக போட்டு படம் எடுக்கலாம் என நம்பிய இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு, என் நன்றிகள். எல்லோரும் கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடிக்கும். ஆதரவு தாருங்கள். நன்றி..” என்றார்.

Our Score