தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023 நடைபெற்றது. ஜனவரி 6 -ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் நேற்று இந்த விழா நிறைவடைந்தது.
இதில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் பங்கேற்றார்.
அப்போது வெற்றிமாறனிடம், “ஓடிடி வருகைக்குப் பின் நாம் நினைத்ததைப்போல் படம் எடுக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறதா..?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிக சுதந்திரம் காணப்பட்டது போல தோன்றியது. ஆனால் இப்போது சொல்கிறேன். தியேட்டர்களில் படம் வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் வேறு எதிலும் இல்லை.
ஓடிடியில் படத்தை கொடுப்பதால் நாம் செலவு செய்த பணம் திரும்ப கிடைத்துவிடும். அதேசமயம் ஒரு படத்தை தியேட்டரில் வெளியிட்டால் அந்தப் படம் முதலீடு செய்ததற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பணம் கிடைக்க வழி செய்யும்.
ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து ஓடிடி தளங்கள் நம்மிடம் இப்படித்தான் படம் வேண்டுமென நிபந்தனை விதித்தால், நாம் அதை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கும். இதனால் நமது படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும். அந்த மாதிரி நிலைமை நமக்கு வரக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்…” என்றார்.