நேற்று நடைபெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தேர்தலில் நடிகர் பரத் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி வாகை சூடியுள்ளது.
2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த முறை தேர்தலில் 3 அணிகள் போட்டியிட்டன. முன்னாள் தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ‘வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் பரத் தலைமையில் ‘சின்னத்திரை வெற்றி அணி’ என்ற பெயரில் ஒரு அணியும், ‘உழைக்கும் கரங்கள்’ என்ற பெயரில் நடிகர் தினேஷ் தலைமையில் ஒரு அணியுமாக… மொத்தம் 3 அணிகள் இத்தேர்தலில் அணி வகுத்து நின்றன.
இதுவும் இல்லாமல் நடிகர் கணேஷ்கரும், அவரது மனைவியான நடிகை ஆர்த்தியும் தனி அணியாக களத்தில் நின்றனர். ஆர்த்தி தலைவர் பதவிக்குத் தனித்துப் போட்டியிட்டார்.
ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த 3 அணிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர்.
நேற்று விருகம்பாக்கத்தில் இருக்கும் ஏ.கே.ஆர். மஹாலில் இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. 859 வாக்குகள் பதிவாகின. தபால் ஓட்டாக 7 ஓட்டுக்கள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிந்ததும் நேற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டன.
அதன் முடிவுகளின்படி ‘வெற்றி அணி’ என்ற பெயரில் போட்டியிட்ட நடிகர் பரத் தலைமையிலான அணியே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதுவரையிலும் நடந்த எந்தவொரு தேர்தலிலும் இதுபோல் எந்தவொரு அணியும் மொத்தமாக வென்றதில்லையாம். இதுதான் முதல் முறை என்கிறார்கள் அந்தச் சங்கத்தினர்.
இந்தத் தேர்தலில் நடிகர் பரத் தலைவராகவும், நடிகர் நவீந்தர் பொதுச் செயலாளராகவும், நடிகை கற்பகம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்களாக ஆதித்யா, ராஜ்கமல் இருவரும் தேர்வாகினர்.
இணைச் செயலாளர்களாக ஈஸ்வர் ரகுநாதன், குறிஞ்சிநாதன், நடிகை நீபா, நடிகை சிவகவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக
வி.பிரேமி(541)
தேவ் ஆனந்த்(523),
என்.எம்.விஜய் ஆனந்த்(520),
கே.சண்முகம்(511),
டி.சிவக்குமார்(505),
ஜெ.ரஞ்சன்(489),
கே.கமல்ஹாசன்(473),
நீபா(465),
பி.ஜெயலசட்சுமி(459),
சாய் கோபி(431),
எம்.துரைமணி(408),
ஜி.பவித்ரன்(408),
சிவகவிதா(408),
கே.ஜி.வசந்தகுமார்(385),
ரவீந்திரன்(360),
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.












