full screen background image

“இளையராஜாவின் பாடல்களின் உரிமை மீதான வழக்கு” – உயர்நீதிமன்றத்தில் புதிய திருப்பம்..!

“இளையராஜாவின் பாடல்களின் உரிமை மீதான வழக்கு” – உயர்நீதிமன்றத்தில் புதிய திருப்பம்..!

இளையராஜா இசையமைத்த பாடல்கள் தொடர்பான வழக்கின் சாட்சியங்களை பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் வெளியீட்டு உரிமையை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாகவே இனிமேல் தனது பாடல்கள் வியாபாரம் செய்யப்படும் என்று சொல்லிவிட்டார்.

ஆனாலும் இதற்கு முன்பேயே இளையராஜாவின் பாடல்களை வெளியிட உரிமம் பெற்றிருந்த விநியோக நிறுவனங்கள் இன்னமும் பாடல் கேஸட்டுகளையும், டிவிடிக்களையும் விற்றுக் கொண்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இசைஞானி இளையராஜா.

இளையராஜா தனது மனுவில், “நான் தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970–ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.

இதுவரை 1000 திரைபடங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன். இசைக்காக 4 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். நான் இசையமைத்த திரைப்படம் மற்றும் பக்தி பாடல்களை ஒலிபரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை.

ஆனால், என்னுடைய அறியாமையை பயன்படுத்தி, அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3–வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிபரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் அகி உள்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார். பிரதான வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிக்கார்டிங் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்தன. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவில், “இந்த வழக்கில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். எனவே, தனி நீதிபதி முன்புள்ள பிரதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டிய நிலை உள்ளது.

அதனால், இரு தரப்பு ஆதாரங்களையும் பதிவு செய்ய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பி.கோகுல்தாசை, சட்ட ஆணையராக நியமிக்கின்றோம். அவருக்கு 1 லட்சம் சம்பளம் வழங்க வேண்டும். அவர் இரு தரப்பு ஆதாரங்களையும் பதிவு செய்த பின்னர், பிரதான வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

அதுவரை இளையராஜா தன்னுடைய பாடல்கள் தொடர்பான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளக் கூடாது. இந்த இடைக்கால மேல் முறையீட்டு மனுவை பைசல் செய்கிறோம்…” என்று உத்தரவிட்டனர்.

தனிப்பட்ட முறையில் பிரச்சினையை பேசித் தீர்க்க இரு தரப்புமே முன் வராத நிலையில், இனிமேல் இரு தரப்பினரும் தாக்கல் செய்யவிருக்கும் தத்தமது ஆதாரங்கள்தான் இந்த வழக்கின் முடிவினைச் சொல்லும்..

Our Score