full screen background image

குழந்தைகளுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் பற்றி பேசிய நமீதா..!

குழந்தைகளுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் பற்றி பேசிய நமீதா..!

பொதுவாக பாலியல் சீண்டல்கள் பற்றி.. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கெதிரான நிகழ்வுகள் என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடங்கள் நேருமே என்றெண்ணியும், அது கேட்கவே கொடுமையாக இருக்கும் என்பதாலும் யாரும் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்.  ஆனால் நடிகை நமீதா இன்று ஒரு பட விழாவில் அதைப் பற்றித் துணிவாகப் பேசினார்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’.

ஒளிப்பதிவு – பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான் பீட்டர். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மதியம் ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.

img_0787

பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கம்(கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

chaya movie function

விழாவில் நமீதா பேசும்போது “இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச்  சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.. செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி, அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது.

எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.

ஒரு விஷயம்.. ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்தும்கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. நல்ல டியூஷன்  மட்டும் கொடுத்தால் போதாது.  நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று  சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது குட் டச்  எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள். நிறைய பேசுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டு பேருமே செய்ய வேண்டும். இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

img_0704

பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும்.

இது மாதிரி விழாக்களுக்கு அழைக்கும்போது பிரபலங்கள் யாரும் வர முன் வருவதில்லை. ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லியும், பொய்யான காரணத்தைச் சொல்லியும் தவிர்ப்பார்கள், வர மாட்டார்கள். இதை பார்த்து பல முறை நான் வேதனை அடைந்து இருக்கிறேன். இதை எனது அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது  தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.

அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன். அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன். சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்படக் குழுவுக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

img_0658

முன்னதாக அனைவரையும் வரவேற்ற   ‘சாயா’  பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல் படம் பற்றிப் பேசும்போது, ”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’.

இந்தப் படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒரு முறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்த பின், அவன் ஆத்மாவால் அவனது உடலைப் பார்க்க முடியுமா..? பார்த்தால் என்ன செய்யும்..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த ‘சாயா’ படம் பதிலளிக்கும்…” என்றார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா, இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா, நடிகர்கள் கராத்தே ராஜா, ‘பாய்ஸ்’ ராஜன், சின்ராஜ், நடிகைகள்  வசுந்தரா, நாயகி காயத்ரி,  தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.

Our Score