லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி-2’.
இந்த ‘சந்திரமுகி-2’ படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ”இப்படத்தின் பாடல்களை உருவாக்குவதற்காக மைசூரில் இசையமைப்பாளர் கீரவாணியுடன் தங்கினேன். ஒவ்வொரு பாடல் உருவானவிதமும் சுவராசியமாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. அவருடைய அறைக்குச் சென்று கம்போசிங் தொடங்கலாமா? என கேட்டபோது, “முதலில் என்னுடன் செஸ் விளையாடுங்கள்” என்றார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு பாடல்களை குறுகிய கால அவகாசத்தில் உருவாக்கினார். அவருடைய மெல்லிசை பாடல்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.
முதலிலேயே அவர் என்னிடமும், இயக்குநர் வாசு சாரிடமும் ஒரு விசயத்தை தெளிவுப்படுத்தினார். “சந்திரமுகி -2’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு சைதன்ய பிரசாத்தும், தெலுங்கு பதிப்பிற்கு மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதட்டும்..” என்றார். அதன்படி, தெலுங்கு பதிப்பிற்கான தமிழ் பாடல்களை நான் எழுதினேன். தமிழ் பதிப்பிற்கான தெலுங்கு பாடல்களை சைதன்ய பிரசாத் எழுதினார்.
இயக்குநர் பி.வாசுவை மனதார பாராட்டுகிறேன். ஏனெனில் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் வடிவேலுவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கதையையும், திரைக்கதையும் அமைத்து ‘சந்திரமுகி-2’-வை உருவாக்கி இருக்கிறார்.
கதையோட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் வெளியாவதில்லை என ஏராளமானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இந்தப் படத்தில் எனக்கு அமைந்த ஒவ்வொரு பாடல்களும் அருமையான மெலோடி . அழகான சூழல். ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், ”சந்தோஷமாக உணர்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கும், மாஸ்டர் ராகவா லாரன்சுக்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். ராகவா லாரன்ஸை பற்றி புகழ்ந்து பேசுவது அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘சர்வீஸ் இஸ் காட்’. சர்வீஸ் செய்பவர்கள் இறைவன்தானே..! நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ.. கடவுள்.. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சார்தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ” என்றார்.
நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் பேசுகையில், ”மனதில் எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது ஒரு காலத்தில் நடந்து விடும் என்பார்கள். அதனால்தான் நான் இந்த மேடையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகை. நிறைய நேர்காணல்களில் “உங்களின் கனவு கதாபாத்திரம் என்ன?” என கேட்கும்போது, “சந்திரமுகியாக நடிக்க வேண்டும்..” என என் விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன்.
திரையுலகில் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர்கள் குறைவு. தட்டிப் பறிப்பவர்கள்தான் அதிகம். உற்சாகப்படுத்துபவர்களில்.. மிகவும் குறைவானவர்களில் மாஸ்டர் ராகவா லாரன்சும் ஒருவர்.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது ஃபிட்னஸ் குறித்தும்… மோட்டிவேஷனல் குறித்தும்… கரியர் குறித்தும்… நடனம் குறித்தும்.. ஏராளமான பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
‘ஸ்வகதாஞ்சலி..’ பாடலில் கங்கணா மேடத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை பார்த்து வியந்தேன். உங்களிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றியது. அவருடன் சக நடிகையாக பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகாம்மாவுடன், இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம்.
வடிவேலுவை சினிமாவில் பார்த்திருக்கிறேன். டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. உங்களுடைய காமெடியை நேரலையாக உடனிருந்து பார்க்கும்போது கிடைத்த மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனைவரிடம் இணைந்து பணியாற்றியது என் கனவு நனவானது போல் உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி..” என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ”இயக்குநர் வாசு சார் என்னை பார்த்தவுடன், “பிரியா கதாபாத்திரத்தில் நீதான் நடிக்கிற..” என்றார். அப்போதிலிருந்து ஆறு மாதம்வரை தொடர்ந்த இந்த ‘சந்திரமுகி’யின் பயணம் என் வாழ்க்கையில் எப்போது மறக்க இயலாத வகையில் அமைந்தது. இந்த தருணத்தை நான் இப்போதும் கொண்டாடுவேன்.
வடிவேலு சாரை படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் சென்று “நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை…” என்றேன். நான் சென்னைக்கு வந்து தமிழ் கற்றுக் கொண்டது அவருடைய படங்களை வீடியோவில் பார்த்துதான். கங்கணா ரனாவத் என்னுடைய ரோல் மாடல். அவர் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருப்பதை அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்” என்றார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் பேசுகையில், ”பி.வாசு சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு முன் அவருடைய அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்போது “உறுதியாக இணைந்து பணியாற்றுவோம்..” என்றார். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு 20 ஆண்டுகளாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் வாசுவிற்கு நன்றி.
அவருடன் பணியாற்றும்போது படப்பிடிப்பு தளத்தில் எப்போதாவது ஒரு முறையாவது காட்சிக்காக எழுதப்பட்டிருக்கும் பேப்பரை பார்ப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு முறைகூட பேப்பரை பார்க்கவில்லை. எப்போதாவது ஒரு சந்தேகம் கேட்டால்.. உடனடியாக அது குறித்த விளக்கத்தை விரிவாக சொல்வார். அவர் இப்படத்தின் கதையை எவ்வளவு நாள் எழுதி இருப்பார்… எவ்வளவு நாள் யோசித்திருப்பார்.. என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எப்போது கேட்டாலும் பேப்பரை பார்க்காமல் தன் நினைவில் இருந்து எல்லா விசயத்தையும் துல்லியமாக சொல்வார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அழகாக நடித்திருக்கிறார். ஒரு முறை அவரிடம், “நாளைக்கு குதிரையேற்றக் காட்சி இருக்கிறது. நினைவிருக்கிறதா?” என்றேன். “நினைவிருக்கிறது..” என்றார். “ஏதேனும் பயிற்சியை எடுத்திருக்கிறீர்களா?” என கேட்டேன். “ஓரளவிற்கு” என்றார்.
ஆனால், மூன்று கேமராக்களை வைத்து அந்தக் காட்சியை படமாக்கும்போது நேர்த்தியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். நடனத்தைப் போல் குதிரையேற்ற சவாரியையும் இயல்பாக கற்றுக் கொண்டு நடித்தவர் மாஸ்டர்.
‘அழகன்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் கீரவாணியின் ரசிகன் நான். உங்களுடைய பாடலை படமாக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பேசுகையில், ”இயக்குநர் பி.வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள்தான்.
இந்தப் படத்தை முதல்முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.
இந்த ‘சந்திரமுகி’ படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம், “சந்திரமுகியாக நடிப்பது யார்?” என்று கேட்டபோது, “இன்னும் உறுதியாகத் தெரியவில்லை..” என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தப் படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில் நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால், இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம்.
தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள்தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.
‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா…” என்றார்.
‘வைகைப் புயல்’ வடிவேல் பேசுகையில், ”ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பதுதான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால், கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
இதற்கு முந்தைய படமான ‘மாமன்னன்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றியைப் பெற காத்திருக்கிறது இந்த ‘சந்திரமுகி-2’. இந்த ரெண்டு படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற.
முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வர விடாமல் கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. “உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்ல”ன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன்.
நான் குல தெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரனத்தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன்தான். இதற்கு அன்புத் தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.
‘மாமன்னன்’ படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி.வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படங்கள்ல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசுதான் 70 ஆவதே தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.
என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, இந்த ‘சந்திரமுகி-2’ படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார். இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.
அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம்தான் இந்த ‘சந்திரமுகி-2’.
‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் வந்த ‘முருகேசனாக’த்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த ‘முருகேசன்’ என்ன பாடுபடுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன்..” என்றார்.
இயக்குநர் பி.வாசு பேசுகையில், ”இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம்தான். இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம்தான் இந்த இசை வெளியீட்டு விழா.
சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.
நான் எப்போதுமே ஓம் என்று எழுதிதான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சி.இ.ஓ. தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.
நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ…! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.
இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரை காணும்போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.
ரஜினி சாரிடம் ‘சந்திரமுகி-2’ படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன் பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, “நான் வணங்கும் என் குருவை வேண்டிக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்..” என வாழ்த்தினார். அவரிடம், “ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள்தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது..” என்றேன். இப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.
தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே “சரி.. வேலையை ஆரம்பிக்கலாம்..” என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரையில் அவரிடம் எந்தப் படத்திற்கும் முழு கதையையும் சொன்னதில்லை.
‘சந்திரமுகி’ படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் ‘சந்திரமுகி-2’ படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஏனெனில், முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும்தான்.
அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின்போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார்..? அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.
ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார். நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.
‘சந்திரமுகி’யாக நடிக்கவிருப்பது யார்?என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன்.
அப்போது ‘சந்திரமுகி’ குறித்து கேட்டார். “அதன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…” என்று பதிலளித்தேன். “சந்திரமுகியாக நடிப்பது யார்?” என கேட்டார். “இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்..” என்றேன். ஆச்சரியமடைந்த அவர், “ஏன்.. நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாதா..?” என்று கேட்டார்.
அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால், அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகுதான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.
இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த ‘வேட்டையன்’ ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். ‘வேட்டையன்’ என்றால் ‘வேட்டையன்’ மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும்போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும் என்று எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் எப்போதும் ஜாலியான ஸ்லாங்குடன்தான் தமிழ் பேசுவார்.
“அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.
ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.
நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ”இந்த அருமையான மாலை வேளையில் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் “சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா..?” என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் “சரி” என்று ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் ‘சந்திரமுகி’ எப்படி நடப்பார்.. என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்பட துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குநராகவும்.. பிறகு நடிகராகவும்.. பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர்.
அவர் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது “கங்கனா மேடம்” என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் “கங்கனா” என்றார். மூன்றாவது நாள் “ஹாய் கங்கு” என அழைத்தார்.
நான் வடிவேலு சாரின் மிகப் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது. இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், ”ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.” என்றார்.
ராகவா லாரன்ஸ் பேசுகையில், ”இந்த ‘சந்திரமுகி-2’ படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன்தான் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு “சுபாஸ்கரன் ஸார் சென்னைக்கு வருகிறார். அவரை சந்திக்கலாமா..?” என கேட்டார். “சரி” என்று ஒப்புக் கொண்டு அவரை சந்தித்தேன்.
சுபாஷ்கரன் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர். அந்த அன்பை சுபாஷ்கரனிடம் அன்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். அவருடைய நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய பிரம்மாண்டமான லைக்கா நிறுவனத்தில் நானும் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
‘சந்திரமுகி’யாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்.. என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ..! என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வரும்போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே… எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வர வேண்டும்.. என்று நினைத்தேன்.
இது பற்றி வாசு சாரிடம் நான் கேட்டபோது. “சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு போலீஸ் புரொடெக்சன்ஸ் கொடுத்திருக்காங்க..” என்றார். அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்குக்கூட எனக்குப் பயமாக இருந்தது.
அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக போலீஸாரிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, முதலில் “கங்கனா” என்றழைத்தேன். அதன் பிறகு “கங்கு” என்றேன்.
படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம். அவர், இந்தப் படத்தில் நடித்திருப்பது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.
இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் வாசு மற்றும் நான் மூவரும் பாடல் கம்போஸிங்கிற்காக கூடியிருந்தோம். இந்தப் படத்தின் பாடல்களை வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில் உழைக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன்.
ஆனால், கம்போசிங் தொடங்கும் முன் இயக்குநர் வாசுவும், கீரவாணியும் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். பழைய எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடினார்கள். டீ குடித்தார்கள். போண்டா சாப்பிட்டார்கள். ஆனால், வேலையை மட்டும் துவங்கவில்லை. நானோ பாடல்களைக் கேட்க ஆவலாக காத்திருந்தேன்.
சிறிது நேரம் கழித்து கீரவாணி ஸார் கீபோர்டில் கை வைத்து விரல்களை அசைத்தார். ஒரு அழகான மெட்டு பிறந்தது. அதனை வாசு சார் கேட்டார். உடனேயே “ஓ.கே.” சொன்னார். அதுதான் நீங்கள் கேட்ட குடும்ப பாடல். கீரவாணி ஸாரின் கம்போசிங் முழுவதும் சுகி சிவம் சொல்லும் குட்டிக் கதை போல் இருந்தது.
என்னுடைய டென்ஷன் அனைத்தையும் குறைப்பவர் வடிவேலு அண்ணன். அவருடைய காமெடிகள்தான் என் டென்ஷனை குறைக்கும். அவரை இயக்குநர் வாசு சார் “டாக்டர்” என்று சொன்னது மிகச் சரி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.
நான் திரைத்துறையில் நடன கலைஞராக பணியாற்றியபோது பி.வாசு ஸார் இயக்குநர். உதவி நடன இயக்குநராக நான் பணியாற்றியபோதும் அவர் இயக்குநர்தான். நான் நடன இயக்குநராக பணியாற்றியபோதும் அவர் இயக்குநர்தான். நான் வில்லனாக நடித்த போதும் அவர் இயக்குநர்தான். அதன் பிறகு நான் இயக்குநராக மாறிய போதும்,, அவர் இயக்குநராகத்தான் இருந்தார். நான் நடிகராக மாறிய பின்பு இப்போதும் அவர் இயக்குநராகவே இருக்கிறார்.
முதலில் இந்தப் படத்தை நானே இயக்குவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அவர் இயக்கிருக்கிறார். தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் வாசு ஸாரின் இயக்கத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன்.
இந்தப் படத்தில் நான் ‘வேட்டையனாக’ நடித்திருக்கிறேன். ‘வேட்டையன்’ கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புகழ் அனைத்தும் இயக்குநர் வாசு ஸாரைத்தான் சாரும்…” என்றார்.
இதனிடையே ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே ஏழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.