பிரபல மலையாள இயக்குநரான அனில் ‘சாயாவனம்’ படம் மூலமாக தமிழில் தடம் பதிக்கிறார்.
இந்த ‘சாயாவனம்’ படத்தை தாமோர் சினிமா நிறுவனத்தின் பெயரில் தயாரிப்பாளர் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது சமீபத்திய படம் ‘மையா’ இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இயக்குநர் அனில் இயக்கிய ‘பகல் பூரம்’ படத்தின் மூலம் தாமோர் சினிமா தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது. இத்தயாரிப்பு நிறுவனம் இதுவரை ‘வாழ் கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.
இவர்களுடைய தயாரிப்பிலேயே இயக்குநர் அனில், தமிழிலும் இயக்குநராக இந்த ‘சாயாவனம்’ படம் மூலமாக அறிமுகமாவது சிறப்பானது.
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘தர்மதுரை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சௌந்தரராஜா இந்த ‘சாயாவனம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது.
இதற்கு முன் நடிகர் செளந்தர்ராஜா ‘ஒரு கனவு போல’, ‘காமெடி மன்னன்’ கவுண்டமணியுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, ‘கர்ணன்’ புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை எல்.ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார். படத் தொகுப்பினை அருள் சித்தார்த் மேற்கொள்கிறார்.
இந்த ‘சாயாவனம்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் அனில், “எனது தமிழ் திரையுலக அறிமுகத்திற்கு வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவை என்பதால் இத்தனை நாட்கள் காத்திருந்தேன்.
இந்தப் படத்தின் தலைப்பான சாயாவனம் என்பதற்கு ‘அடர்ந்த காடு’ என்ற அர்த்தமாகும். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும்விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்திமிக்கவை. அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன.
இதனாலேயே படத்தின் பெரும் பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. முழுக்க, முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.
கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அனைத்து நடிகர்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..” என்றார்.