full screen background image

பீரியட் படமாக உருவாகும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’

பீரியட் படமாக உருவாகும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. 

தற்போது இந்நிறுவனம் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடத்தில் பாராட்டுக்களைக் குவித்த  ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930-40-களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்தக் ‘கேப்டன் மில்லர்’  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

தொழில் நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24 am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணி புரிகின்றனர்.

மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். பாகுபலி’ படங்கள், ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’ போன்ற மிகப் பெரும் பிளாக் பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் ‘கேப்டன் மில்லருக்கும்’  கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இன்றைக்கு அறிவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரம்மாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும்.

நடிகர் தனுஷுடன் பணி புரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஏனெனில், எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இந்தப் படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில் நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்.

உண்மையில், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப் படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு  ஈர்க்கும் அம்சமாக  இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும்.

எங்களது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளுடனும் வளர்த்து வருகிறது…” என்றார் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்.

Our Score