உலகம் இன்று தொழில் நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஆனால் மனிதர்கள் மட்டும் தனித்தனி தீவுகளாகப் பிரிய ஆரம்பித்தவிட்டார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சக மனிதனிடம் அன்பையும், பாசத்தையும் பாராட்டும் ஒரு கதைதான் இந்த ‘புத்தன் இயேசு காந்தி’ திரைப்படம்.
இப்படத்தை பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ‘கபிலன் சிவபாதம்’. படத்தின் முக்கிய கதை மாந்தர்களாக அசோக், கிஷோர், வசுந்தரா நடிக்கிறார்கள். மேலும் மதுமிதா, ‘கல்லூரி’ அகில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதி இரவில் நிகழ்கிறது. சென்னையின் இரவு நேர இன்னொரு முகத்தை வியப்பூட்டும்படி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். கூவம் ஆற்றைக் கூட அழகாகக் காட்டியுள்ளார்கள்.
இசை வேத்சங்கர். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘மதுபானக் கடை’, ‘மூன்றாம் உலகப் போர்’ ஆகிய படங்களின் இசையமைப்பாளர். பாடல்கள் – கவிபாஸ்கர். படத்தொகுப்பு – ரமேஷ்பாரதி. கலை – மூர்த்தி. நடனம் – எஸ்.சுரேஷ், சண்டை – மிண்ட் கணேஷ்.
இப்படத்தை இயக்கியுள்ளவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர். இவர் பத்திரிகை, டிவி, சினிமா என்று பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். ‘பாலை’, ‘பகல்’ படங்களில் செந்தமிழன், எழில்பாரதி ஆகியோரிடம் சினிமா பயின்றவர். சில குறும் படங்களையும் இயக்கிய அனுபவசாலி.
இது மூன்றே நாட்களில் நடக்கும் கதை. இது முழுக்க, முழுக்க சென்னையில் நடக்கும் கதை. அசோக், வசுந்தரா இருவரும் பத்திரிகையாளர்கள். அசோக் ஜாலியான பேர்வழி. சமூகத்தை வெகு ஜன ரசனை, கேளிக்கை என்று இலகுவான வழியில் அணுகுபவர். வசுந்தராவோ சமூகக் கோபமும், பொறுப்பும், போராடும் குணமும் கொண்டவர். அநீதி கண்டு பொங்குபவர். எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் அல்லவா..? அது போல கருத்து கொள்கை முரண்பாடுள்ள இருவருக்குள்ளும் ஈர்ப்பு வருகிறது.
இந்த இருவரும் ஒரு பேட்டிக்காக ஒரு நபரை சிறைக்குச் சென்று சந்திக்கிறார்கள். அவர் ஒரு தண்டனை கைதி. அவருடன் மூன்று நாட்கள் பேசுகிறார்கள். அவரை மாற்ற முயல்கிறார்கள். ஆனால் அவரோ இவர்களை மாற்ற முயல்கிறார். அந்தளவுக்கு சித்தாந்தவாதி. இறுதியில் செய்தி சேகரிக்கச் சென்றவளே, செய்தி ஆகிறாள். அது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையின் போக்கு.
படத்துக்காக பத்திரிகை அலுவலகம், ஜெயில் என இரண்டு அரங்குகள் போடப்பட்டுள்ளன. தண்டனை கைதியாக கிஷோர் நடித்திருக்கிறார். அவர் இந்த கதாப்பாத்திரத்துக்காக நிறைய குறிப்புகள், ஆவணங்களைப் பார்த்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டு பின்புதான் நடித்தாராம்.
சென்னையில் அதிகமாகப் போராட்டங்கள் நடைபெறும் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் போன்ற இடங்களில் பல மாதங்கள் ரகசியமாகப் படப் பதிவு செய்து அதையும் இந்தப் படத்தில் சேர்த்துள்ளனர்.
‘புத்தன் இயேசு காந்தி’ தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.