லண்டன் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.நடராஜன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பெளவ் பெளவ்’.
இந்தப் படத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்க் டி மியூஸ் மற்றும் டெனிஸ் வல்லபன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநரான பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது.
உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனும், படத் தொகுப்பாளர் மோகனும் இணைந்து இசையை வெளியிட இயக்குநர் சசி, இசையைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் மது பாலகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழிகளில் இந்த படத்துக்காக என்னை பாட வைத்திருக்கிறார்கள். வங்க மொழியில் நான் பாடிய முதல் பாடல் இந்தப் படத்துக்காகத்தான்…” என்றார்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது, “மாட்டுக்கார வேலன்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த படங்களை தயாரித்தது நடராஜன் அவர்களின் நிறுவனம்தான்.
அவர் மிகவும் துணிச்சலான, ரசனையான தயாரிப்பாளர். இயக்குநர் பிரதீப் மிக ஆழமான சிந்தனை கொண்ட, கடின உழைப்பாளி. அவரின் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தயாரித்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்றார்.
நடிகர் அசோக் பேசும்போது, “இயக்குநர் பிரதீப் என் நண்பர், அவருடன் பல கதை சொல்ல உடன் சென்றிருக்கிறேன். கடைசியில் இந்தக் கதைக்கு சரியான ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார். பணம் இருப்பவர் மட்டுமே தயாரிப்பாளர் ஆகிவிட முடியாது, இயக்குநரின் சிந்தனையை புரிந்து கொள்பவர்தான் உண்மையான தயாரிப்பாளர். இந்த படத்தை பார்ப்பதை தாண்டி, உணர முடியும். நாம் மறந்த நிறைய விஷயங்களை நமக்கு இந்த படம் நினைவுபடுத்தும்…” என்றார்.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது, “சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. ‘பேரன்பு’ மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதை வியாபாரம் செய்ய ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனாலும் கேரளாவில் நீங்க ‘பேரன்பு’ படத்தின் தயாரிப்பாளர்தானே எனக்கேட்டு பலரும் என்னுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர். எவ்வளவோ கமெர்சியல் படங்களில் கிடைக்காத ஒரு பெயர் ‘பேரன்பு’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. அப்படி ஒரு பெயர் இந்த படத்துக்கும் கிடைக்கும்..” என்றார்.
இயக்குநர் சசி பேசும்போது, “என் நண்பன் இயக்குநர் பிரதீப்பை இயக்குநராக்கிய தயாரிப்பாளர் நடராஜன் சாருக்கு நன்றி. ‘பூ’ படத்தைத்தான் என்னுடைய முதல் படமாக இயக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால் என்னால் ‘சொல்லாமலே’தான் எடுக்க முடிந்தது. ஆனால் பிரதீப் தன்னுடைய முதல் படத்தையே தான் நினைத்த மாதிரி கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்து வைத்த இயக்குநர்..” என்றார்.
படத் தொகுப்பாளர் மோகன் பேசும்போது, “சினிமாவை ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்த குடும்பம் கே.நடராஜன் அவர்களுடையது. இவரின் முழுப் பெயர் ஜெயந்தி நடராஜன். எம்ஜிஆர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார் இவரின் தந்தை.
‘பௌவ் பௌவ்’ என்பதே அன்பை சொல்லக் கூடிய வார்த்தை. எனக்கு முக்கியமான நேரத்தில் நாங்கள் வளர்த்த நாயுடன் பல சிறந்த அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன.
நடராஜன் சார் ஒரு ரசனையான தயாரிப்பாளர். விலங்குகளை வைத்து படம் எடுக்கும் சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும். இந்த குழுவின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். ‘சரிகம’ நிறுவனம் மாதிரி நல்ல நிறுவனங்கள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி…” என்றார்.
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது, “ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோருக்கு முன்பேயே போயஸ் கார்டனில் குடியேறிய சினிமாக்காரர் ஜெயந்தி ஃபிலிம்ஸ் நடராஜன் செட்டியார். மிகப் பெரிய தயாரிப்பாளர். தற்போது தேவர், ராமநாராயணன் ஆகியோரை தொடர்ந்து நடராஜன் விலங்குகளை வைத்து படம் எடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும். பத்திரிக்கையாளர்கள் நல்ல படங்களை எப்போதும் கைவிட மாட்டார்கள், இந்தப் படத்தையும் நிச்சயம் வெற்றிப் படம் ஆக்குவார்கள்…” என்றார்.
படத்தின் இயக்குநரான பிரதீப் கிளிக்கர் பேசும்போது, “இந்த இசை வெளியீட்டு விழா எனக்கு மிக நிறைவாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்து எங்களை வாழ்த்தியிருப்பது மகிழ்ச்சி.
பலரைப் போலவே நான் இன்னமும் பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். தாய், தந்தை எனக்கு கொடுத்த பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி என்ற மூன்று விஷயங்கள்தான் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் சசி சார் என்னை நன்றாக புரிந்தவர், அதனால் அப்படியே என்னை தெலுங்கு இயக்குநர் கருணாகரன் சாரிடம் அனுப்பி வைத்தார். அங்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நடிகர் ரகுவரன் சாரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை சிறந்த படங்களை இயக்குவாய் என என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அதை நான் நிறைவேற்றுவேன்.
தயாரிப்பாளர் நடராஜன் சார் இந்தக் கதையை கேட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, எந்த கேள்வியும் கேட்காமல் இந்த படத்தை எடுத்தார். இது குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக இருக்கும்..” என்றார் இயக்குநர் பிரதீப் கிளிக்கர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே நடராஜன், ஸ்பெஷல் எஃபெக்ஸ் சேது, படத் தொகுப்பாளர் கோபால், பாடலாசிரியர் ராகுல் காந்தி, ஜெஃபி ஜார்ஜ், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், மாஸ்டர் அஹான், சரிகம ஆடியோ ஆனந்த், இசையமைப்பாளர் டெனிஸ் வல்லபன், ஜே.சி.டி. பிரபாகர், டேவிஸ், பாடகர் சுஜித் சுதர்ஷன், நடிகர் சத்யன், நடிகை ஷர்மிளா, ராம்பாபு, புலிக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
















