கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது திரைப்படம் இதுவாகும்.
ஒளிப்பதிவு – ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara), இசை – ப்ரித்வி சந்திரசேகர், படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், சண்டை இயக்கம் – டான் அசோக், கலை இயக்கம் – மோகன், ஒலிக் கலவை – M.R.ராஜா கிருஷ்ணன், ஒலியமைப்பு – ஸிங்க் சினிமா, ஒலிப்பதிவு – தாமஸ் குரியன், 2D அனிமேஷன் – மனு ஆனந்த் & ஷாஜ் அஹமத், கலரிஸ்ட் – பாலாஜி கோபால், உடை வடிவமைப்பு – ஜெயலக்ஷ்மி சுந்தரேஷன், ஒப்பனை – வினோத் சுகுமாரன் & ராம் பாபு, விஷிவல் எபெக்ட்ஸ் – igene, விஷிவல் எபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் – தேவா சத்யா, மக்கள் தொடர்பு – Done , சுரேஷ் சந்திரா, ரேகா, டிசைன்ஸ் – வெங்கி, தயாரிப்பு மேலாண்மை – D.ரமேஷ் குச்சிராயர், தலைமை விநியோக தொடர்பாளர் – செந்தில் முருகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பவன் நரேந்திரா, துணை தயாரிப்பு – M.அசோக் நாராயணன், இணைத் தயாரிப்பு – கல்ராமன், S.சோமசேகர், கல்யாண் சுப்ரமண்யம், எழுத்து, இயக்கம் – ரதீந்திரன் ஆர்.பிரசாத்.
படம் குறித்து இயக்குநர் ரதீந்தரன் R.ப்ரசாத் பேசும்போது, “டெக்னிக்கலாக இது திரைக்கு வரும் எனது முதல் திரைப்படம் ஆகும். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
இப்படம் தொடர் படப்பிடிப்பில் ஒரே கட்டமாக 35 நாட்களில் நீலகிரி மலைப் பகுதிகளில் மற்றும் தனியான காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு காடுகளில் கடும் சிக்கல்ளுடன், கடும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில் படமாக்கப்பட்டாலும், படக் குழுவின் அற்புதமான ஒப்புதலால் வெகு விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் தவிர இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். கடும் இன்னல்களுக்கிடையே பெரும் ஒத்துழைப்பு தந்த படக் குழுவிற்கு பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்படத்தில் பிரமிக்கும்வகையில் காட்சிகளை படமாக்கிய இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா(Roberto Zazzara)வுக்கு தனித்த முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் ப்ரித்வி சந்திரசேகரின் இசை கண்டிப்பாக ரசிகர்களிடம் பெருத்த அளவில் பாராட்டுக்களை பெறும். படக் குழு வெளியிட்ட மோஷன் டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியிடப்படும்…” என்றார்.
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசும்போது, “இப்படத்தில் இயக்குநர் ரதீந்தரன் R.ப்ரசாத் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். மிகச் சிறந்த கதை சொல்லியாக மட்டுமல்லாமல், அவர் மிகச் சிறப்பான டெக்னீஷியனாகவும், சிறப்பான திட்டமிடல் ஆளுமையாகவும் திகழ்கிறார். 35 நாட்களில் அற்புதமான வகையில் படத்தை முடித்து எங்களை பிரமிக்க வைத்துள்ளார்.
மேலும், இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமாக அமைந்தது அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அவரது நடிப்பு திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. மிகக் குறுகிய காலத்தில் தனக்கென தனியொரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார் அவர். இப்படத்தில் அவரது நடிப்பு அவரை மிகப் பெரிய உயரத்திற்கு இட்டுச் செல்லும்…” என்றார்.