ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.
பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக மாறினார். இந்நிலையில் தற்போது ‘K-7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் ஜூலி.
மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. உடனேயே நடிக்க ஒத்துக் கொண்டேன். இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றே நம்புகிறேன்..” என்கிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு, இயக்குநர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுமாம்.