ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாரதி ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘பெஸ்டி’.
இந்தப் படத்தில் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளு சபா ஜீவாவும் நடித்துள்ளனர்.
ஜே.வி. இசையையும், ஆனந்த் கேமராவையும், கோபி படத் தொகுப்பையும், சுரேஷ் நடன இயக்கத்தையும், அருள் குமரன் இணைத் தயாரிப்பையும் கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ரங்கா.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் இப்படம் வளர்ந்துள்ளது.
இந்தப் ‘பெஸ்டி’ படம் பற்றி இயக்குநர் ரங்கா பேசும்போது, “இளமை துள்ளலுடன் திகிலும், மர்மமும் நிறைந்த படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் திகில், மர்மத்துக்கு புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். அவர் இதில் கிளாமர் மட்டுமல்ல… நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
இந்தப் படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்தோம். அதில் டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றுத் தந்தது.
அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது..
கொல்கத்தாவில் நடைபெற்ற ‘விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், ‘சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என ‘பெஸ்டி’ படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன.
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் போட்டியில் கலந்து கொள்ளவும் தற்போது தேர்வாகி உள்ளது. ‘பெஸ்டி’ திரைப்படம் எனக்கு மட்டுமல்ல இதில் பணியாற்றியுள்ள தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் மிகச் சிறந்த புகழினையும், பாராட்டினையும், விருதுகளையும் பெற்றுத் தரும். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்..” என்றார்.









