தயாரிப்பாளர் பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும், பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக “பெல்” உருவாகியிருக்கிறது.
இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.
இப்படம் பத்திரிகை, மீடியா நிருபர்களுக்கு இன்று திரையிடப்பட்டு அவர்களது பாராட்டை பெற்றது. பின்னர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் நடித்தவர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பேசினார்கள்.
நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, “எனக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென்றால் நான் நிறைய நாவல்கள் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், கிரைம் நாவல்கள் வரும் அதில் பத்திரிகையாளர் கதாபாத்திரம் வருவதைப் பார்த்து பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், பத்திரிகையாளர்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன்.
பட தயாரிப்பாளர் பீட்டர் ராஜுக்கு எனது வாழ்த்துக்கள். போட்ட முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கணும். பெல் படக் கதையை இயக்குநர் புவன் கூறும்போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்திற்கு இசையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வெற்றி பெறும். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு தேவை…” என்றார்.
இயக்குநர் வெங்கட் புவன் பேசும்போது, “படத்தை எடுக்க தயாரிப்பாளர் முக்கியம். பீட்டர் ராஜ் எனது நண்பர் அவர் இப்படத்தை எடுங்கள். நான் தயாரிக்கிறேன் என்றார். மனதில் எனக்கு ஒரு பயம் இருந்தது. நம்மை நம்பி படமெடுக்கிறார். படம் நன்றாக வரவேண்டும் என்று எண்ணினேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நல்ல பட தர வேண்டும் என்று ரொம்பவும் ஆராய்ந்து இந்தக் கதையை தேர்வு செய்தோம்.
அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் படத்தின் உதவி இயக்குநர் போல் என்னுடனேயே இருந்து எல்லா பணிகளிலும் உதவினார். இன்றுவரை அவர் உடனிருந்து எல்லாவற்றையும் செய்து தருகிறார். அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசுதான். அவருக்கு என் நன்றி.
தமிழில் நிறைய விஷயங்கள் மறைந்து கிடக்கிறது. கதை வசனகர்த்தாவான வெயிலோன் தமிழ் விரும்பி. நிறைய படிப்பார். பேசுவார். அவர்தான் பழந்தமிழர் மருத்துவம் பற்றி கூறி அகத்தியர் 6 ரகசிய மருத்துவ குறிப்புகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாது. அதை மையமாக வைத்து கதை எடுப்போம் என்றார். அது சொல்ல வேண்டிய விஷயம் என்று எனக்கும் தோன்றியது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ரொம்பவே பாராட்டி தயாரிக்க முன் வந்தார்.
படத்தில் முக்கிய வேடம் ஏற்ற குரு சோமசுந்தரம் நடிப்பு பற்றி எல்லோருக்குமே தெரியும் மிகவும் அருமையாக கலக்கியிருக்கிறார். ரொம்ப ஆதரவாகவும் இருந்தார். அவரிடம் முதலில் கதையை சொன்னபோதே நடிக்க சம்மதம் தெரிவித்தார் அதுவே எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீதர் மாஸ்டருக்கு கதையின் ஒன் லைனைத்தான் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவர் நடன இயக்குநராக இருந்தாலும் அவருக்குள் ஒரு நடிகன் மறைந்திருக்கிறான். அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
கதாநாயகி துர்கா. அவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். காட்டுக்குள் பெரும் பகுதி படப்பிடிப்பு என்றபோது ஆண்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு பல அசவுகரியங்கள் இருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் ரொம்ப தைரியமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி ஸ்வேதாவும் நன்றாக நடித்திருக்கிறார். கேமராமேன் மற்றும் ரமேஷ் பாலாஜி யூனிட் ரொம்பவே ஆதரவாக இருந்தனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப்படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களிடம் சொல்லி அதை பாதுகாக்கவும், கட்டளையிட்டார். அந்த ரகசியங்ளைப் பாதுகாப்பதில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே இப்படத்தின் மையக் கதையாகும்.
நான் லீனியர் முறையில் காதல், குடும்பம், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக அமைந்த படமாக பெல் இருக்கும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும்..” என்றார்.
நடன இயக்குநரும், நடிகருமான ஶ்ரீதர் பேசும்போது, “இந்தப் படத்தில் பெல் கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு பெரியது. இதற்காக இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தில் வசனம் பெரிய அளவில் ஒர்கவுட் ஆகியிருக்கிறது. வெயிலோனின் வித்தியாசமான சிந்தனை வசனத்தில் வெளிப்பட்டிருக்கிறது. பார்வையற்ற ஒருவனுக்கு மற்றவர்களது உருவம் எப்படி தெரிகிறது என்பதை வசனத்திலேயே அற்புதமாக சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தி இருக்கிறார்கள். நடன இயக்குநராக இதுவரை எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்தீர்கள். நடிகனாக முதல் அடியெடுத்து வைக்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை…” என்றார்.
கதாநாயகி துர்கா பேசும்போது, “சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல முறை முயன்றிருக்கிறேன். ஆனால் நான் திருமண ஆன பெண் என்று சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது.
ரொம்ப சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவம். இப்படத்தில் வேறு பாத்திரத்துக்குத்தான் ஆடிஷன் செய்தேன். ஆனால் ஹீரோயின் வேடம் தந்தார்கள். ஆடிஷன் இல்லாமல்தான் நடித்தேன். இயக்குநர், தயாரிப்பாளர் உடன் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் என்னை நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கதை, வசனகர்த்தா வெயிலோன் பேசும்போது, “இயக்குநர் வெங்கட் புவனும், நானும் நண்பர்கள். தமிழர்கள் வரலாறு நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து இக்கதை அமைக்கப்பட்டது. இது சொல்லப்பட வேண்டிய கதை என்று தயாரிப்பாளரும் சொன்னார்.
குரு சோமசுந்தரம், மாஸ்டர் ஶ்ரீதர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர். குறிப்பாக மறைந்த நிதிஷ் வீரா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து இதில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் முக்கிய பாத்திரம் நடித்திருக்கிறார். கிணற்றில் குதித்து நீச்சல் காட்சியில் நடிக்க வேண்டும் என்றபோது உடனே நடிக்கிறேன் என்றார். ஆழமான கிணற்றில் குதிக்க தயாராக இருந்தவரிடம் சென்று உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டபோது தெரியாது என்றார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நடிப்புக்காக உயிரை பணயம் வைக்கிறாரே என்று ஷாக் ஆகி, பிறகு அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து நீச்சல் காட்சியில் நடிக்க சொன்னோம். அவர் டைவ் அடித்து குதித்த பிறகு பாதுகாப்புக்கு இருந்தவர்கள், அவரை கிணற்றில் குதித்து காப்பாற்றினார்கள்” என்றார்.













