தமிழ் சினிமா வரலாற்றில் பொன் மகுடமாக திகழும் ‘அழகி’ படம் வெளியாகி இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டி பார்க்கும் டைரியை போன்று, பள்ளிக் கால காதல், வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அழகான காவியமாக சொன்ன படம் ‘அழகி’.
இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடித்த இப்படம் தமிழகத்தில் வெள்ளி விழா கொண்டாடியது.
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்தின் ரசிகர்கள் உட்பட பலரும், படம் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை இணையமெங்கும் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து நம் அனைவர் மனதையும் கவர்ந்த நடிகை நந்திதா தாஸ், இந்தப் படத்தில் நடித்தது குறித்துப் பேசும்போது, “எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! ‘அழகி’ படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை.
எனக்கு இப்போது நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்ப முடியவில்லை. படத்தின் நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. என்னை இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடிக்க வைத்ததற்காக, இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி. அதே போல் உடன் நடித்த அற்புதமான நடிகர்கள் பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே மற்றும் அனைவருக்கும் நன்றி.
மிக முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான பாடல்களையும்.. இசையையும் தந்ததற்காக நன்றி. மீண்டும் ‘அழகி-2’ எடுக்கப்பட்டு, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்…” என்று கூறியுள்ளார்.