பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE-5 ஓடிடி தளம், தமிழில் தங்களது அடுத்த படைப்பாக அயலி என்ற தொடரினை அறிவித்துள்ளது.
இத்தொடரை Estrella stories நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரித்துள்ளார்.
இத்தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மாதவன், லிங்கா மற்றும் சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் முத்துக்குமார் இத்தொடரை இயக்கியுள்ளார்.
இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய கதைதான் இந்த ‘அயலி’ இணையத் தொடர்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8-ம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதைதான் இந்த ‘அயலி’ இணையத் தொடர்.
அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்க வழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது.
இந்தப் பாரம்பரியத்தை கடைப்பிடிக்காவிட்டால், அந்த ஊரின் காவல் தெய்வமான ‘அயலி தேவி’ கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.
இந்த பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை உடைத்து, தான் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள் தமிழ்ச்செல்வி.
அந்த வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக் கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெற்றாளா..? இல்லையா.. என்பதுதான் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடரின் திரைக்கதை.
பொழுதுபோக்கு கதைக் களத்தில், சமூகத்திற்கான ஒரு செய்தியுடன் உருவாகியிருக்கும் இந்த ‘அயலி’ இணையத் தொடர் வரும் ஜனவரி 26 அன்று ZEE-5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.