தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம். சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86.
இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை சரவணன்தான் நிர்வகித்து வந்தார்.
‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சரவணன் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் வெற்றிப் பாதையில் எந்தவொரு தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார்.
இவரது தலைமையின் கீழ் ஏ.வி.எம். நிறுவனம் தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, பெரும் லாபத்தைக் கண்டதுடன், பல ஊழியர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.
பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகித்தபோதும், ஏ.வி.எம். சரவணன் அனைவரிடமும் எளிமையாகவும், பணிவுடனும் பழகக்கூடியவர். எந்தவித ஆடம்பரமும் இன்றி திரைத்துறை விழாக்களில் அவர் கலந்துகொள்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீது வைத்திருந்த அதே அளவு மரியாதையையும், அன்பையும் சரவணன் மீதும் வைத்திருந்தனர். மேலும், 1986-ம் ஆண்டு சென்னை மாநகரின் ஷெரீப் பதவியையும் வகித்துள்ளார்.
ஏவி.எம் மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த நிறுவனத்தை ஏவி.எம்.சரவணன் கவனித்து வந்தார். தற்போது வயதானால் வீட்டில் ஓய்வில் இருந்தார். அவருக்குப் பின் அவரது மகன் எம்.எஸ்.குகன் தற்போது ஏவி.எம். நிறுவனத்தைக் கவனித்து வருகிறார்.









