full screen background image

எம்.ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய திரைப்படம்!

எம்.ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய திரைப்படம்!

ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் திரைத்துறையில்  அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார்.

ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல்முறையாக இணையும் புதிய படத்தை அறிவித்துள்ளார்.

நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

இந்தப் படம் குறித்து நடிகர் அதர்வா முரளி பேசும்போது, “திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க, முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது” என்றார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் பேசும்போது, “காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும்.  இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இது போன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி.ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்..” என்றார்.

ஸ்ரீவாரி பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.ரங்கநாதன் பேசும்போது, “இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் நான் கவனித்தவரையில்  எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன்.

அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையிலான படம்தான் இது.

அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காகப் பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப் பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்..” என்றார்.

Our Score