full screen background image

தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்படம்

தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்படம்

சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் S.ரமேஷ்குமார் தயாரிக்கவுள்ள திரைப்படம்  ‘அதாகப்பட்டது மகாஜனங்களே.’

‘காமெடி கிங்’ கவுண்டமணியின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்கான இந்த வசனத்தை டைட்டிலாக வைத்து புத்திசாலித்தனமாக கதை செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், பாண்டியராஜன், மனோபாலா, புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் P.K.வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இத்திரைப்படத்திற்காக மீண்டும், மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் D. இமான். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்பசேகர்.

படத்தின் கதை பற்றி பேசிய இயக்குநர் இன்பசேகர், “நாம எவ்வளவுதான் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புத்திசாலித்தனமா கணக்கு போட்டாலும்  அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும்.

அந்தப் பிரச்சினையில் நம்முடைய முயற்சிகள் எல்லாம் தோற்றுபோய் எதிர்பாராதவிதமாக  நடக்கும் சில நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை.. அழுவதா என்று புரியாத நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம். இது உலகத்தில் இருக்கும் எல்லா மானிடர்களுக்கும் நடந்ததுதான். நடப்பதுதான்.

இந்த பொத்தாம் பொதுவான கதைக் கருவை மையமாக வைத்து விறுவறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம்தான்  இந்த ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்படம். இந்த வித்தியாசமான தலைப்புக்கான காரணம், படத்தின் இறுதிக் காட்சியில்தான் தெரியவரும்..” என்றார். 

படத்தின் ஹீரோவான உமாபதி தான் நடிப்புத் துறையில் இறங்குவதை தன் தந்தையான நடிகர் தம்பி ராமையாவிடம் முதலில் சொல்லவே இல்லையாம். தானாகவே இவர் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போதுதான் இயkகுநர் இன்பசேகர் ஹீரோ தேடுவதை அறிந்து அவரிடம் சென்று பார்த்து பேசியிருக்கிறார்.

மேக்கப் டெஸ்ட்டெல்லாம் எடுத்து செக் செய்த பின்பு உமாபதியை ஓகே சொல்லியிருக்கிறார் இயக்குநர் இன்பசேகர். அதன் பின்புதான் இன்பசேகரிடம் தான் இன்னாரின் மகன் என்கிற உண்மையை சொன்னாராம் உமாபதி.

கையோடு இயக்குநரையும், தயாரிப்பாளரையும் அழைத்துக் கொண்டு தனது தந்தையிடம் சென்று அறிமுகப்படுத்தி வைத்து, நடந்த கதையைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். தம்பி ராமையாவும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

எப்படியோ அப்பாவின் பெயரைக் காப்பாற்றினால் சரி..!

Our Score