‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘காட்டுப் புறா’ திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ படைத்த பெருமைக்குரியவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ்.
இவர் இப்போது தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ சார்பில் தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370.’
இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ‘ஆர்ட்டிகிள் 370’. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கும். தேசிய ஒற்றுமை அதில் எதிரொலிக்கும்.
நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில் நாயகனாக… இந்திய ராணுவத்தின் கமாண்டோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிஷி காந்த் இதுவரையிலும் 6 முறை மிஸ்டர் தமிழ்நாடு, 2 முறை மிஸ்டர் இந்தியா, 2 முறை மிஸ்டர் ஏஷியா, 2 முறை மிஸ்டர் வர்ல்ட் நம்பர் 6 போன்ற பட்டங்களை வென்றவர்.
நாற்பது நாட்கள் நடத்த வேண்டிய இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை, 4 கேமராக்களைக் கொண்டு வெறும் 48 மணி நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி சாதனை படைக்க இருக்கிறார் இயக்குநர் பாபு கணேஷ்.
பிரபல சண்டை இயக்குநரான ஜாக்குவார் தங்கமும், அவரது குழுவினரும் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்டமான அதிரடி காட்சிகளை இப்படத்திற்காக அமைக்க உள்ளனர்.
இப்படித்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிக-நடிகையர், மற்றும் பங்கு கொள்ளவிருக்கும் தொழிற் நுட்பக் கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மீண்டும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளான ‘கின்னஸ்’, ‘லிம்கா’, ‘ஆசியா’, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ போன்றவற்றை இலக்காகக் கொண்டு களம் இறங்குகிறது இந்த ‘370’ திரைப்படம்.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரை பல திரையுலகப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டனர். இயக்குநர்கள் டி.ராஜேந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், அமீர், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், கலைப்புலி எஸ்.தாணு, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ஆர்.கே.செல்வமணி, ஜி.தனஞ்செயன், சிவசக்தி பாண்டியன், சத்யஜோதி டி.தியாகராஜன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், ஜாகுவார் தங்கம் ஆகியோர் டைட்டில் போஸ்டர்களை வெளியிட்டனர்.