ராம்குமார்-அருந்ததி ஜோடியாக நடித்திருக்கும் ‘அர்த்தநாரி’ படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
“இயக்குநர் பாலாவின் பாசறையில் பயின்ற இயக்குநரான சுந்தர இளங்கோவன் இந்த ‘அர்த்தநாரி’ படத்தை இயக்கியிருக்கிறார். அவர் பயின்ற பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கி தரும் அளவுக்கு சிறப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இதில் கதாநாயகி வேடமேற்றிருக்கும் நடிகை அருந்ததி அந்தக் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப நிறைய மெனக்கெட்டு நடித்திருக்கிறார். படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் கம்பீரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னமும் அதிக உயரத்தை தொடுவார் என்று நம்புகிறேன்.
கதாநாயகன் ராம்குமார் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு நடித்து இருப்பது பெரிய விஷயம் எனக் கூறலாம். இவர்களோடு அனுபவம் மிக்க நாசர் சாரும் இந்தப் படத்தில் நடித்திருப்பது படத்துக்கு கிடைத்திருக்கும் பெரிய கௌரவமாக கருதுகிறோம்.
அருமையான பாடல்களாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இசையமைப்பாளர் செல்வ கணேஷ், கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்கு அருமையாக இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘அர்த்தநாரி’ படம் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்த ‘அர்த்தநாரி’ நிச்சயம் பிடிக்கும் படமாக இருக்கும்…” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் முத்தமிழன்.