அபிராமி மெகாமால் நிறுவனத்தின் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரிக்கும் ‘உன்னோடு கா’ படத்தில் இளைய திலகம் பிரபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் பிரபு பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இப்படத்தின் கதையை தயாரிப்பாளரான அபிராமி ராமநாதனே எழுதி இருக்கிறார். கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். ஒரு நடிகரின் வாழ்க்கையில் இது போன்ற நகைச்சுவை வேடங்கள் கிடைப்பது அரிதானது.
இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தைக் குடும்பத்தினருடன் வந்து பார்ப்பது குறைந்து கொண்டே போகிறது. காரணம், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கதைகள் இல்லாததுதான். இந்தக் குறையை அபிராமி ராமநாதன் இந்த ‘உன்னோடு கா’ படத்தின் மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார். அது மட்டுமின்றி படத்திலும் நகைச்சுவையாக, ஒரு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
கதையின் நாயகனாக ஆரி, நாயகியாக மாயா, பால சரவணன், மிஷா கோஷல், கை தென்னவன், ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, மன்சூரலிகான், M.S.பாஸ்கர், சுப்பு பஞ்சு, ராஜாசிங், வினோத் சாகர், தேனி முருகன், சண்முகசுந்தரம், சாம்ஸ், நாராயண் என சிறந்த கலைஞர்களும் என்னுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவில் சக்தி சரவணன், இசையில் C.சத்யா, நடனத்தில் கல்யாண், அதிரடி ஆக்சன் காட்சிகளில் விஜய் ஜாக்குவார் என சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.
இப்படத்தில் நான் இரண்டு வித கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். கிராமத்தில் கையில் அருவாளை தூக்கிக் கொண்டு வெட்ட துரத்தும் முரடனாகவும், சென்னையில் தன் மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள்ளேன்.
இதில் ஊர்வசி எனக்கு மனைவியாக நடித்துள்ளார். நாங்கள் ஜோடியாக இணைந்து நடித்தாலே படத்தில் கலாட்டாதான். படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும், ஊர்வசியும் நானும் ரசித்து, சிரித்து நடித்திருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து படப்பிடிப்புக் குழுவினரும் ரசித்து சிரித்தார்கள்.
என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட புதிய இயக்குநர்கள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.வும், ஒரு அறிமுக இயக்குநரே. இளைய தலைமுறையான இவருடனும், இவருடைய டீமுடனும் இணைந்து பணிபுரிந்தது என் இளமை கால நாட்களை நினைவுபடுத்துகிறது.
கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட கதைக் களத்துடன், குடும்பம், காதல், கல்யாணம், நட்பு என பல அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த ‘உன்னோடு கா’ படம் இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை படமாக அமையும் என எதிர்பார்க்கிறேன். எங்களை வாழ வைக்கும் தமிழக திரை ரசிகர்களுக்கு, நாங்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது…” என்றார்.