full screen background image

“தியேட்டர்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கும்வரை தமிழ்ச் சினிமா முன்னேறாது…” – தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் பேச்சு..!

“தியேட்டர்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கும்வரை தமிழ்ச் சினிமா முன்னேறாது…” – தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் பேச்சு..!

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் கதை எழுதி, தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’.  ராம்குமார், அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மதியம் வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவரான பாரி வேந்தர்  பாடல்களை வெளியிட,  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரங்கபாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஆகியோர்  பெற்றுக் கொண்டார்கள்.

படத்தின் டிரைலரும், இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. டிரெயிலரை பார்த்தபோது படத்தின் கதை ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக தெரிந்தது.

IMG_0051

யார் காலிலும் விழுகக் கூடாது..! – நாசரின் அறிவுரை..!

விழாவில் நாயகன் ராம்குமார் பேசும்போது, ”நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து முதலில் அது பற்றி நாசர் சாரிடம் பேசியபோது அவர் சொன்ன ஒரேயொரு அறிவுரை.. இங்கே திறமைக்குத்தான் முதல் தகுதி.. உனக்குத் தகுதியிருந்தால் நீ யார் காலிலும் விழுக்க் கூடாது. உன் திறமைக்கேற்ற வாய்ப்பு தானாக உன்னைத் தேடி வரும் என்றார். அவருடைய அந்த அறிவுரைதான் என்னை இந்தச் சினிமாவில் நிலை நிறுத்தியிருக்கிறது. அவர் சொன்னதை நான் என்றென்றும் பின்பற்றுவேன்.. என்னுடன் நடித்திருக்கும் அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜயசாந்தியாக அவர் வருவார்..” என்றார் நம்பிக்கையோடு.

IMG_0188

தியேட்டர்கள் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது..!

தயாரிப்பாளர் கோவைத் தம்பி பேசும்போது, “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள், அப்புறம் நடிக நடிகையர்கள், அப்புறம் இயக்குநர்கள் கையில் இருந்தது. ஆனால் இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது.

அதுகூட தப்பில்லை. ஆனால் அந்தத் திரையாங்கு உரிமையாளர்கள் மறைமுகமாக அரசியல்வாதிகளின் கையில் சிக்கியிருக்கிறார்கள். இது மாறும்வரை தமிழ் சினிமா நல்ல நிலைமைக்கு வரவே வராது..” என்றார்.

actor nasser

படத்தில் வலுவான கதை உண்டு..!

நடிகர் நாசர் பேசும்போது “இங்கே திரையிடப்பட்ட பாடல்களால்  இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும், இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு ஸ்ட்ராங்கான கதை உண்டு .அது இந்தப் படத்துக்கு உதவும். இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தர் தனது குழும மருத்துவமனைகள் மூலம் செய்யும் உதவிகளை போல நடிகர் சங்கத்துக்கும் செய்ய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

paarivendhar

தமிழ்ச் சினிமா துறை நன்றாக இருக்க வேண்டும்

இறுதியாக பேச வந்த பாரிவேந்தர் தன் பேச்சில் ”என்னோடு எப்போதும் உடன் இருக்கும் தம்பி முத்தமிழ் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். அதனால்தான் நானும் ஒரு கட்டத்தில் சில படங்களை நேரடியாகவே தயாரித்தேன். அந்த அனுபவம் எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. தயாரிப்பாளர் முத்தமிழ் இந்தப் படத்தில் வெற்றி பெற்று இது போல் நிறைய படங்களை எடுக்க வேண்டும்..” என்றார்.

Our Score