இந்தியாவின் மணியான இயக்குநரான மணிரத்தினதோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவு. அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநரான அமரனுக்கு.
பிரபல இயக்குநரும், வீணை வித்வானுமாகிய மறைந்த திரு. வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவில் பின்புலம் அமைக்க கலை இயக்குநர் அமரனுக்கு அந்த விழாவின் அமைப்பாளர் இயக்குநர் பார்த்திபன் மூலமாக வாய்ப்பு வந்தது.
அந்த விழாவில் கலை இயக்குநர் அமரன் அமைத்திருந்த மேடை அமைப்பு, நிகழ்வு கூடம், நிகழ்ச்சி அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல வேலைகளை அந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்த இயக்குநர் மணிரத்னம் மிகவும் ரசித்திருக்கிறார்.
அமரனின் கலைத் திறமை மணிரத்னத்திற்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதால் தற்போது தான் இயக்கிக் கொண்டிருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் கலை இயக்குநராக பணியாற்ற அமரனை அழைத்திருக்கிறார்.
தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதும் இந்தியாவிலேயே மிக முக்கியமான கலை இயக்குநர்களை பணிக்கமர்த்தும் இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து எதிர்பாராமல் திடீரென்று வந்த அழைப்பைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் அமரன்.
இப்போதும்கூட இதனை நம்ப முடியாத திகைப்பில் இருக்கிறார். தற்போது ‘காற்று வெளியிடை’ படத்தின் முதல் ஷெட்யூல் ஊட்டியில் முடிவுற்ற நிலையில் அமரனின் கலைப் பணியில் முழு திருப்தியடைந்த இயக்குநர் மணிரத்னம் அமரனை வெகுவாகப் பாராட்டினாராம்.
திறமைசாலிகளை ஊக்குவிப்பதே படைப்பாளிகளின் மிக முக்கிய கடமை. இயக்குநர் மணிரத்னம் இப்போது செய்திருக்கும், இந்தக் கடமை வரும்காலத்தில் இன்னொரு சாபுசிரிலை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப் போகிறது..!










