எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”.
இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா, சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் உள்படப் பலர் நடித்திருக்கின்றனர்.
இயக்குநர் – மித்ரன் R. ஜவஹர், கதை – மாரிசெல்வன் சு, வசனம் – ஜெகஜீவன் / மாரிசெல்வன் சு, பாடல், இசை – ஜேம்ஸ் வசந்தன் / வேத் சங்கர் / கிரி நந்த், தயாரிப்பு நிறுவனம் – எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், படத் தொகுப்பு – M.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ, பின்னணி இசை – VV & குழு, பத்திரிகை தொடர்பு – சதீஷ் குமார் – சிவா(AIM).
வரும் மார்ச் 3-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசும்போது, “நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக் கூடாது. அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இந்தக் கதை, ஆனால் இந்தக் கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் உண்மை.
உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். இந்தப் படம் அதைப் பற்றிப் பேசும்..” என்றார்.
சூப்பர் குட் சுப்பிரமணி பேசும்போது, “பாக்யராஜ் சார் இந்தப் படத்தை வாழ்த்த வந்ததே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான். சினிமாவுலகைப் பொறுத்தவரை ஆக்சன் ஹீரோவுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழில் அமிதாப்பச்சன் இல்லாத குறையை ஈஷான் நிறைவேற்றுவார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை காவ்யா பேசும்போது, “நாம் நிறைய படங்களில் நடித்தாலும் சில படங்கள்தான் நம் மனதுக்கு நெருக்கமாக, முக்கியமான படமாக தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட படம். எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, “இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம்தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் R ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப் பெரிய இயக்குநர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.
நாயகி ப்ரணாலி பேசும்போது, “தமிழில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்து வேலை பார்க்கும் படத்தில் நான் நாயகியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது..” என்றார்.
நாயகன் ஈஷான் பேசும்போது, “இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம்தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி.
பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் கருத்துச் சொன்னாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இந்தப் படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது.
அதை அனைவரும் ரசிக்கும் வகையிலும் படம் சொல்லியுள்ளது. இந்தப் படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த ‘அரியவன்’ படத்தின் டிரெய்லர் நன்றாக உள்ளது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் ‘கண்கள் இரண்டால்’ பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் படத்திலும் அதேபோல் ஒரு அருமையான பாடலை தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் மித்ரனுடன் ‘உத்தமபுத்திரன்’ படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புதுமுகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.