தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் விஜய் ஆன்டனி, தற்போது புதுமுக இயக்குநரான ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் ‘அண்ணாதுரை’ படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.
இப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. தற்போது இந்த குடும்ப பாங்கான ஜனரஞ்சக படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.
‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ‘ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.