‘கலகலப்பு’ படத்தோடு கோடம்பாக்கத்தில் இருந்து காணாமல் போன நடிகை அஞ்சலி இன்றைக்கு மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார்..!
இயக்குநர் மு.களஞ்சியத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தனது சித்தி மற்றும் இயக்குநர் களஞ்சியத்துடன் சண்டை போட்டு ஹைதராபாத்துக்கு ஷிப்ட் ஆனார் அஞ்சலி. அங்கேயே 2 படங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தில் அஞ்சலியை ஹீரோயினாக புக் செய்திருந்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம், அஞ்சலி திரும்பி சென்னைக்கு வந்தால் தனது படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி தான் தயாரிப்பாளராக இருக்கும் கில்டு அமைப்பில் புகார் கொடுத்தார்.
கில்டு அமைப்பும் இது குறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியது.. ஆனாலும் இந்தப் படத்தில் அஞ்சலி நடிப்பார். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்கிற மறைமுகமான எச்சரிக்கையுடன் அஞ்சலியை புக் செய்தனர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு.
இதோ இன்றைக்கு வெற்றிகரமாக 1 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி சென்னை வந்து ஜெயம்ரவியுடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதாம்..! இப்போதுவரையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம்.. இயக்குநர் மு.களஞ்சியம் மேற்கொண்டு இதில் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியவில்லை..
தயாரிப்பாளர் தரப்பில் தைரியமாக அஞ்சலியை புக் செய்து அழைத்து வந்து நடிக்க வைப்பதில் இயக்குநருக்கும், ஹீரோ ஜெயம் ரவிக்கும் பங்கில்லாமல் இருக்காது.. ஆனாலும் எப்படி இது சாத்தியம் என்று விசாரித்தால், இதில் மறைமுகமாக கில்டு அமைப்பிற்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையேயான ஈகோ பிரச்சினையும் சிக்கியிருப்பதாகத் தகவல்.
கில்டு அமைப்பே தேவையில்லை என்பது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒட்டு மொத்தக் கருத்து. அதனாலேயே கில்டு அமைப்பில் இருந்து எந்தக் கோரிக்கை வந்தாலும் அதனைக் கண்டும் காணாமல் போவது இந்தச் சங்கத்தினர் வழக்கம். அதன்படிதான் இதனையும் கண்டு கொள்ளாமல்.. எதிர்ப்பு வந்தால் சமாளித்துக் கொள்வோம் என்கிற முன்னேற்பாட்டுடன்தான் ஷூட்டிங் நடந்து வருகிறதாம்..!
ஏதோ பிரச்சினையில்லாமல் அஞ்சலியை ஸ்கிரீனில் காட்டினால் சந்தோஷம்தான்..!