T-2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F.பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அம்பி’.
மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.
மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஏ.பி.முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நா.ராசா எழுதிய பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பிரபல பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.
கலை இயக்குநராக அன்பு பணியாற்றியுள்ளார். வைலன்ட் வேலு ஸ்டண்ட் இயக்குநராகவும், கார்த்திக் நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – T2 மீடியா, F.பிரசாந்தி பிரான்சிஸ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் J.எல்வின்.
படம் பற்றி இயக்குநர் பாஸர் J.எல்வின் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம். இந்த கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக, அப்பாவியாக, பயந்தாங்கோலியாக இருக்திறான்.
அவனைச் சுற்றியுள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால்தான் அனைத்தும் நடக்கிறது. அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள்.
இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா.. இல்லை அன்னியனாக மாறினாரா… என்பதை குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நகைச்சுவை நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன், அவர் சிறப்பாக நடித்துள்ளார்…” என்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமலஹாசன் இன்று வெளியிட்டார்.
விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள மிக பிரம்மாண்டமாக நடத்த படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.