பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தல அஜீத்குமாரின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருக்கிறது.
தற்போது இந்த நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘தொடரி’, விக்ரம் பிரபு நடிப்பில், பிரபாகரன் இயக்கத்தில் ‘முடிசூடா மன்னன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இப்போது தல அஜீத்தின் அடுத்தப் படத்தையும் இதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜீத்குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறையாகும்.
அனிருத் இசையமைக்க, வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், ஆண்டனி ரூபனின் படத் தொகுப்பில், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகை, நடிகையர் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்தப் படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், “எங்கள் நிறுவனத்தின் மூலம் நாங்கள் பல்வேறு படங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப, சிறந்த கலைஞர்களைக் கொண்டு தரமான படங்கள் வழங்கி வருவது என்பது எங்களது நிறுவனத்தாரின் கோட்பாடாக இருந்து வருகிறது.
அந்த வகையில் அஜீத் நடிக்கும் இந்தப் படத்தை தயாரிப்பதில் நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
இயக்குநர் சிவா சொன்ன கதையும், அவருடைய நேர்த்தியான திட்டமிடுதலும் இந்தப் படத்தின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. முழுக்க, முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்படும் இந்த பிரம்மாண்டமான படைப்புக்கு விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும்..” என்று உற்சாகத்துடன் கூறினார்.
இந்தப் படம் அஜீத்குமாரின் 57-வது படமாகும்.










