full screen background image

பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..!

பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..!

ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அகம்பாவம்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளரும், நடிகருமான வராகி படத்தின் பிரதான வில்லன் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.

இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, ‘நாடோடிகள்’ கோபால், ‘ஜாக்குவார்’ தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

‘கோலிசோடா’, ‘சண்டிவீரன்’ படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ் வி.விஸ்வம்,  சண்டை இயக்கம் – இந்தியன் பாஸ்கர், நடன இயக்கம் – ராபர்ட், படத் தொகுப்பு – சின்னு சதீஷ், கதை மற்றும் தயாரிப்பு – வாராகி, இணை தயாரிப்பு – சுஜிதா செல்வராஜ், எழுத்து, இயக்கம் – சத்ரபதி ஸ்ரீமகேஷ். இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்கிற வெற்றிப் படத்தை இயக்கியவர்.

#Agampaavam Movie Stills (1) 

பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது ‘அகம்பாவம்’.  கதாசிரியர் வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளை கதையாக்கியிருக்கிறார். அதற்கு தனது வலிமையான வசனங்கள், திரைக்கதை யுக்தியின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ஸ்ரீமகேஷ். 

ஒரு பெண் போராளிக்கும் ஜாதியை வைத்து  அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த ‘அகம்பாவம்’ படத்தின் கதை. இதற்கு மத்தியில் அழகான ஒரு காதலும் இருக்கிறது.

திருமணத்திற்குப் பின் சில காலம் நடிக்காமல் இருந்தார் நடிகை நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு இயக்குநர் ஸ்ரீமகேஷ் சொன்ன இந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக 10 கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார். 

இதில் நமீதா கதையின் நாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளரும் நடிகருமான வாராகி மிகக் கொடூரமான அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க இருக்கிறது.

#Agampaavam Movie Stills (7) 

துவக்க நாளன்றே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ். இந்த க்ளைமாக்ஸ் காட்சி தொடர்ந்து நான்கு நாட்கள் படமாக்கப்படுகிறது. 

காரணம் நீண்ட நாட்கள் கழித்து, தமிழ் சினிமாவில் நீதிமன்றம் ஒன்றில் ஒரு பெண் ஒருவரின் துணிச்சலான வாதம், இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியாக இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. இந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுவதும் நமீதாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் என அடித்து சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ். 

இந்தக் காட்சி முழுக்க, முழுக்க வசனங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நமீதா இதன் வசனங்களை ஒரு வாரம் முன்பே எழுதி வைத்துக்கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கத் தயாராகியிருக்கிறாராம்.

“இதுவரை நமீதா நடித்துள்ள 60 படங்களில் அவரிடம் நாம் பார்த்திராத புதுவிதமான நடிப்பை இதில் நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு நடை, உடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றிலும் புதிய நமீதாவை நீங்கள் பார்க்கலாம். அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறார். இந்தப் படம் நமீதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்கும்..” என்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ் நம்பிக்கையுடன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு மேல் நடைபெற இருக்கிறது.

Our Score