எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடிமைப் பெண்’. வசூல் சாதனை பெற்ற ‘அடிமைப் பெண்’ முதன்முதலில் வெளிவந்தபோது 25 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.
ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்றிருந்தார். மற்றும் ஜோதிலட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோரும் நடித்திருந்தனர்.
கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். சொர்ணம் வசனம் எழுதி இருந்தார். கே.சங்கர் இயக்கத்தில் இந்தப் படம் உருவானது.
1969-ம் ஆண்டு வெளியான இந்த ‘அடிமைப் பெண்’ படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தமிழகமெங்கும் அறிமுகமானது. அதேபோல் ஜெயலலிதா முதன்முதலாக பாடிய ‘அம்மா என்றால் அன்பு’ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
படப்பிடிப்பு முழுக்க, முழுக்க ஜெய்ப்பூர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்ற படமும் இதுதான்.
48 வருடங்களுக்கு பிறகு இப்போது இன்றைய நவீன டெக்னிக்கல் அம்சங்களை சேர்த்து புதுப்பொலிவுடன் ‘அடிமைப் பெண்’ திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை தி ரிஷிஸ் மூவீஸ் பட நிறுவனத்தை சேர்ந்த கே.சாய் நாகராஜன் டிஜிட்டலில் அதிநவீனப்படுத்தி வெளியிடுகிறார்.
“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த காலக்கட்டத்தில் ‘அடிமைப் பெண்’ படத்தை நவீனப்படுத்தி வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்கிறார் தயாரிப்பாளர் கே.சாய் நாகராஜன்.