1997-ம் ஆண்டு ‘நாகமண்டலம்’ என்ற கன்னடப் படத்தில் நடிகையான அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதைத் தொடர்ந்து தமிழில் ‘பிரண்ட்ஸ்’, ‘பூந்தோட்டம்’, ‘கலகலப்பு’, ‘மிலிட்டரி’, ‘யெஸ் மேடம்’, ‘சூரி’, ‘வாழ்த்துகள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘தில்லாலங்கடி’, ‘தம்பிக்கோட்டை’, ‘கத சொல்லப் போறோம்’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீப ஆண்டுகளாக அவரைச் சுற்றி பலவித சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பணப் பிரச்சினை காரணமாக பல முறை சமூக வலைத்தளங்களில் தனக்கு பண உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேயிருந்தார் விஜயலட்சுமி.
கடந்த 1 வருடமாக சென்னையில் தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமி இங்கும் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதால் வீட்டு உரிமையாளருடன் சண்டையிட்டார். காவல்துறை, நீதிமன்றம் என்று பிரச்சினை பெரிதாகி தற்போது சென்னையில் இருந்து மீண்டும் பெங்களூருக்கே சென்றுவிட்டார்.
விஜயலட்சுமி, அவரது அம்மா, அவரது அக்கா மூவரும் பெங்களூரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். அவர் பெங்களூர் சென்ற 2-வது நாளே அவரது அம்மா திடீரென்று இறந்துவிட்டார். இதனால் கதிகலங்கிப் போன விஜயலட்சுமிக்கு அவருக்கு நெருக்கமான நண்பிகள் இருவர்தான் உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
மேலும் ‘என்னை பிச்சைக்காரி என நினைத்தாலும் பரவாயில்லை; எனக்கு உதவுங்கள்’ என கூறி வங்கி கணக்கு எண்ணையும் வெளியிட்டார். அவரது வேண்டுகோளை ஏற்று அவருக்கு பலரும் நிதி அளித்து வந்தனர். இதுவரையிலும் அவரது வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய்வரை சேர்ந்துள்ளது.
இதற்குப் பிறகு நடிகை விஜயலட்சுமி, கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “என் தாய் இறந்தவுடன் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பாமா, ஹரிஷ் என்ற இருவர்தான் எனக்கு உதவினார்கள். அழுவதை தவிர அப்போது எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை.
கலைஞர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நடிகர்கள் சிவராஜ்குமார், யஷ் ஆகியோரிடம் பேசி உள்ளேன். கர்நாடகாவில் நான் பிச்சைக்காரிதான். எல்லாவற்றுக்கும் நான் பிச்சைதான் எடுக்கிறேன். எனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
எனது அக்கா பல்வேறு பிரச்சினைகளுடன் உள்ளார். அவரை நான்தான் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அம்மா இறந்தவுடன் எனக்கு அந்தப் பொறுப்பு வந்துள்ளது. இந்த அக்காவினால்தான் என் அம்மா மன நோயாளியாகவே வாழ்ந்து இறந்தார்.
இப்போது எனக்கென யாரும் இல்லை. நான் அனாதையாகி விட்டேன். இனிமேல் நான் ஒரு நாளும் சென்னைக்கு போக மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன். பத்திரிகையாளர்கள் எனக்கு உதவ வேண்டும்…” என்று பரிதவிப்புடன் கூறினார்.