ஜல்லிக்கட்டு விஷயத்தில் பீடா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகை திரிஷாவுக்கும் கடுமையான கண்டனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
அவர் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையூறு நிகழ்வித்து அவரை அவசரமாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து சென்னைக்கே விரட்டியடித்தார்கள் தமிழ் ஆர்வம் கொண்ட இளைஞர்கள்.
இதைத் தொடர்ந்து திரிஷா தனது ட்வீட்டர் பக்கம் மூலமாக சில கருத்துக்களைத் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவதுதான் தமிழர்களின் மரபா என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து ட்வீட்டரில் அவருக்கு பலரும் கண்டனங்களையும், திரையுலகத்தைச் சேர்ந்த கமல்ஹாசன், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சிலர் தங்களது பாராட்டுக்களையும் மாறி, மாறி கொடுத்துக் கொண்டேயிருக்க போர்க்களமானது ட்வீட்டர் உலகம்.
கடைசியாக “நான் ஜல்லிக்கட்டை இப்போதும் எதிர்க்கிறேன்…” என்று அவர் ட்வீட்டரில் ஒரு செய்தியைப் போட மீண்டும் பதற்றமானது. அடுத்த பத்து நிமிடத்தில் தனது ட்வீட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்த திரிஷா, தொடர்ந்து தனது ட்வீட்டர் பக்கத்தை முடக்கிவிட்டார்.
நேற்று இரவில் இருந்து அமைதியாக இருந்த திரிஷா இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தனது பங்களிப்பு பற்றி இப்போது ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைதளத்தில் என்னுடைய டிவிட்டர் பக்கம் முலமாக தெரிவித்து இருக்கிறேன்.
நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள். நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள். என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை கருத்து கொண்டவள் அல்ல.
என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்படும் கண்டனங்கள், மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது.
இந்தக் கண்டனங்களை நான் எதிர்கொண்டு, என் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் அதேநேரத்தில், சில விஷமிகளால் என்னுடைய டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.
அந்த விஷமிகள் என் ட்விட்டர் பக்கத்தின் வழியாகவே, நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம்.
அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ்வோர்டையும் மாற்றிவிட்டு, அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை, தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன்.
நான் இந்த கடிதத்தை தயார் செய்யும் வேளையில்கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும்..? எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாரேதான் இருக்கிறேன். ஆயினும் இந்த சோதனையான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.