full screen background image

பாலிவுட் மாபியாக்களின் கொலை மிரட்டல் – நடிகையின் கதறல்!

பாலிவுட் மாபியாக்களின் கொலை மிரட்டல் – நடிகையின் கதறல்!

தன்னைக் கொலை செய்ய சதி நடப்பதாக பிரபல பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

2000-ம் வருட காலக்கட்டத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் தனுஸ்ரீ தத்தா. சமீப ஆண்டுகளில் பட வாய்ப்பில்லாமல் நடிக்காமல் இருந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டில் பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி பரபரப்பை கூட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனுஸ்ரீ தத்தா மீண்டும் புதிய குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள செய்தியில், “நான் தற்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். நான் குறி வைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன்.

கடந்த ஆண்டு எனக்கு கிடைக்க இருந்த ஒரு பட வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு எனது வேலைக்காரி நான் குடிக்கும் தண்ணீரில் ஏதோ ரசாயானத்தை கலந்ததால் எனது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. எனது வாகனத்தில் சிலர் இரண்டு முறை பழுதை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தினர். நான் உயிரிழப்பதில் இருந்து தப்பித்து மும்பை வந்தேன்.

இப்போது எனது வீட்டிற்கு வெளியில் அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன.  இதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகவும் மாட்டேன். இங்கேயே இருந்து எனது நடிப்பில் கவனம் செலுத்துவேன்.

பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் மீ டூ’வில் நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணமாகும்.

அநீதிக்கு எதிரான நின்றதற்காக துன்புறுத்தப்பட்டால் இது எந்த மாதிரியான இடம்..? மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும். இங்கே அனைத்து விஷயங்களும் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் என்னைப் போன்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்..” என்று எழுதியுள்ளார்.

Our Score