சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்த நாளையொட்டி, ‘யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் மகளிர் மட்டுமே கலந்து கொண்ட கருத்தரங்கம் ஒன்று நேற்று நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வியின் தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, “நான் 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13-ம் தேதிதான் சென்னை வந்தேன். இந்த 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும்போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன என்று திரும்பி பார்க்கும்போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்தநாள் விழாவில் இன்று பேசுவதைத்தான் என் வாழ்நாளின் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.
பெரியாருக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து, வளர்ந்தாலும், என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளது. நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது..
பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோது யாரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஆனாலும், மதம், சாதி, இனம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை.
கடவுள் இருக்கிறாரா என்று எனக்கு தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார் பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். எனக்கு 6-வது அறிவை கடவுள் தரவில்லை. எனது பெற்றோர் தந்தனர். அவர்களை நான் கடவுளாக நினைக்கிறேன்.
படிப்பு இல்லாதவர்களிடம்தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று ஆசிரியர் வீரமணி ஐயா இங்கே சொன்னார். நானும் படிக்காதவள்தான். அதனால்தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது.
இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்கு பயந்து தங்களது துணிச்சலை வெளிக்காட்டுவது இல்லை. பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுபட்டார் பெரியார். பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா.. அல்லது வேண்டாமா.. என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்..” என்றார்.
மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்காமல் இருக்கணும்..!