இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.
கர்நாடகாவில் கூர்க்கில் பிறந்த இவர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012-ல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.
பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசித்தி பெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம் பெற்றார் நடிகை டயானா எரப்பா.
இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.
மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னணி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் வெள்ளித்திரையில் அதுவும் இந்தியாவின் அதிமுக்கிய இயக்குநரான மணிரத்னத்தின் படம் மூலமாக அறிமுகமாயிருப்பதை மிகவும் பெருமையாக எண்ணுகிறார் டயானா எரப்பா.