தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குநர்களே தங்கள் படங்களின் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பார்கள். அவர்களில் இயக்குநர் கரு.பழனியப்பன் மிகவும் முக்கியமானவர்.
நடிகர் அருள்நிதியின் நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள்.
தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, “எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம்தான் ‘புகழேந்தி எனும் நான்’. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் இயக்குநர் கரு.பழனியப்பனின் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கூடவே, அருள்நிதியுடன் இணைந்து நடிப்பதிலும் பெரும் மகிழ்ச்சி, ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும்.
டிசம்பரில் தொடங்கும் இந்த ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்…” என்றார்.