நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே வழக்கமான சினிமா நடிகர்களைவிடவும் மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். கேரள நடிகையான அபர்ணா வினோத் மலையாளத்தில் 2 படங்களில் மட்டுமே நடித்தவராக இருந்தாலும், அவருடைய நடிப்புத் திறமை அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டியிருக்கின்றன.
இவர் ஏற்கெனவே விஜய்யின் ‘பைரவா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இது பற்றி அபர்ணா வினோத் பேசுகையில், “நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அதுதான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன்…” என்கிறார்.
‘பரத் படத்தில் நாயகியாக நடிக்க எவ்வாறு தேர்வானார்..?’ என்ற கேள்விக்கு, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரும் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து என்னை அழைத்தனர்.
எனக்கு இப்போது 22 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் ஒரு தாயாகவும், ஆசிரியராகவும் நடிப்பு எனக்கே சவாலானதுதான். ஆனால் என்னால் அந்தக் கதாபாத்திரத்திற்கு உரிய நடிப்பைக் காண்பிக்க முடியும்..” என்று உறுதியாகச் சொல்கிறார்.
சீட்டின் நுனிக்கு வர வைக்கும் அளவுக்கு பரபரப்பான திரைக்கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகப் போகும் பெயரிடப்படாத இந்தப் படத்தை நடிகர் ஷரண் இயக்குகிறார். இவர் ‘இனிது இனிது’ மற்றும் ‘சார்லஸ் ஷபிக் கார்த்திகா’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். தரண் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க உள்ளது.