full screen background image

நடிகர் விவேக் கடைசியாக நடித்த படங்களின் நிலைமை என்ன..?

நடிகர் விவேக் கடைசியாக நடித்த படங்களின் நிலைமை என்ன..?

சமீபத்தில் காலமான நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘தாராள பிரபு’. இந்தப் படத்தில் டாக்டர் கண்ணதாசனாக நடிப்பில் கலக்கியிருந்தார் விவேக்.

இதையடுத்து தற்போது கடைசியாக 4 படங்களில் நடித்து வந்தார் விவேக். அது ‘அரண்மனை-3’, ‘இந்தியன்-2’ மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் அருளின் தலைப்பிடப்படாத படம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படங்கள்தான் அவை.

இதில் ‘அரண்மனை-3’ படம் முழுமையாகத் தயாராகிவிட்டது. படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்தக் கொரோனா பிரச்சினை காரணமாகத்தான் படத்தை வெளியிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தினால் நடிகர் விவேக்கால் பிரச்சினையில்லை.

மீதமிருக்கும் 3 படங்களிலுமே அவருடைய பகுதிகள் இன்னமும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். இந்த நிலைமையில் விவேக்கின் திடீர் மரணம் இந்தப் படக் குழுவினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

‘இந்தியன்-2’ திரைப்படமாவது மீண்டும் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பது தெரியாத நிலை. அதனால் அதுதான் விவேக் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் என்ற பெருமையைப் பெறும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக். அப்போது விவேக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் விஜய் சேதுபதியே வெளியிட்டிருந்தார்.

விவேக்கின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நடிகர் விஜய் சேதுபதியால் அஞ்சலிப் பேச்சினை சரியாகப் பேசக் கூட முடியவில்லை. அவ்வளவு தடுமாறினார். விவேக்குடனான சில நாட்கள் பழக்கமே அவருக்குள் அப்படியொரு அழுத்தத்தைக் கொடுத்திருந்தது.

இப்போது இந்தப் படத்தில் விவேக்கின் பகுதியை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இதேபோல் அருள் அண்ணாச்சியின் நடிப்பில் சமீபத்தில் குளுமணாலியில் நடந்த படப்பிடிப்பிலும் நடிகர் விவேக் கலந்து கொண்டார். இந்தப் படத்தில் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், விவேக் இருக்க வேண்டிய பகுதிகள் சிலவை பாக்கியிருக்கின்றனவாம். இந்தக் குழுவினரும் தற்போது இதை சரி செய்வது எப்படி என்று யோசித்து வருகிறார்கள்.

இந்த மூன்று படங்களிலுமே விவேக் போர்ஷனை அப்படியே வைத்திருந்தாலும் விவேக்கின் குரலில் பேசுவதற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை நாட வேண்டிய சூழல். ஒரு காலத்தில் மிமிக்ரியில் பட்டையைக் கிளப்பிய விவேக்கிற்கே இப்போது இன்னொருவர் அவர் குரலில் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

Our Score