ஜீ-5 ஓடிடி தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ-5-ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார்.
இத்தொடரில் கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். மேலும் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத் தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இந்தத் தொடரை இயக்கியுள்ளார்.
7-எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது.

இந்த ‘விலங்கு’ ஜீ-5 ஒரிஜினல் இணைய தொடர், வரும் பிப்ரவரி 18-ம் தேதியன்று வெளியாகிறது. இதையொட்டி இந்தத் தொடரில் பணியாற்றிய குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசும்போது, “ரொம்ப நாட்களுக்குப் பிறகு மீடியாக்களை சந்திக்கிறேன். இந்தக் கதையை முதலில் கேட்டபோது படமாக்கலாம் என்ற ஐடியாதான் வந்தது. ஆனால் கதையை சொல்ல சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் இது புதிதாக இருந்தது.
நான் ஹீரோதான். ஆனால், படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன். தயாரிப்பாளர் அண்ணன் மதனும் பிஸியாக இருந்தவர்தான். ஆனால் அவரும் படம் இல்லாமல் இருந்தார். ஒரு தோல்வி படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரசாந்த்… என்று நாங்கள் மூவரும் இணைந்து எங்களது அனுபவத்தை பயன்படுத்தி இந்தத் தொடரை செய்துள்ளோம். எங்களை நம்பி ஜீ-5 இதை முன்னெடுத்துள்ளார்கள். நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டோம்.
இந்தத் தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமேல் நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக இந்த ‘விலங்கு’ இணையத் தொடர் இருக்கும்..” என்றார்.
ஜீ-5 ஒரிஜினல் தொடரான இந்த ‘விலங்கு’ வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.