‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது.
‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த்சாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வருணும் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த ‘போகன்’ படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் வருண் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘போகன்’ படத்தில் தனது பங்களிப்பு பற்றி பேசிய நடிகர் வருண், “ஜெயம் ரவி – அரவிந்த்சாமி – ஹன்சிகா மோத்வானி என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘போகன்’ படத்தில் என்னுடைய பங்கும் இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்.
ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்…? ஆரம்பத்தில் அவர்களுடன் நடிக்கும்போது சற்று பதட்டமாகத்தான் இருந்தது. ஆனால் நாளடைவில் அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் என்னை பதட்ட நிலையில் இருந்து சகஜ நிலைமைக்கு மாற்றிவிட்டது.
நான் நடித்த காட்சிகள் சிறப்பாக அமைய, அவர்கள் இருவரும் என்னோடு உடன் இருந்து வழி நடத்தியது மட்டுமில்லாமல் எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும் இருந்து என்னை ஊக்குவித்தனர்.
இயக்குநர் லக்ஷ்மன் சார் என்னுடைய கதாபாத்திரத்திற்காக, ஒரு தனித்துவமான நடைப்பழக்கத்தை எனக்கு சொல்லி கொடுத்தார். அதற்கான காரணத்தை ‘போகன்’ திரைப்படத்தை பார்த்த பின்பு தெரிந்து கொள்வீர்கள்.
தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வருவதை நான் பெருமையாக கருதுகிறேன். வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி, என்னுடைய கலை பயணத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்…” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் வருண்.












